லோக்சபாவில் 'இ - சிகரெட்' பிடித்த எம்.பி., : மம்தா கட்சி உறுப்பினர் மீது பா.ஜ., புகார்
லோக்சபாவில் 'இ - சிகரெட்' பிடித்த எம்.பி., : மம்தா கட்சி உறுப்பினர் மீது பா.ஜ., புகார்
ADDED : டிச 12, 2025 01:01 AM

புதுடில்லி: “பார்லிமென்டின் லோக்சபாவில் திரிணமுல் காங்கிரஸ் எம்.பி., ஒருவர், 'இ - சிகரெட்' பிடித்தார்,” என, பா.ஜ., - எம்.பி., அனுராக் தாக்குர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
பார்லி.,யில் குளிர்கால கூட்டத்தொடர் கடந்த 1ம் தேதி துவங்கி நடந்து வருகிறது. எஸ்.ஐ.ஆர்., பணி, வந்தே மாதரம் பாடலின் 150வது ஆண்டு உட்பட பல்வேறு விவாதங்களில் ஆளும் மற்றும் எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் இடையே அனல் பறக்கும் விவாதங்கள் நடந்து வருகின்றன.
லோக்சபாவில், கேள்வி நேரத்தின் போது பா.ஜ., - எம்.பி., அனுராக் தாக்குர் நேற்று பேசுகையில், “தடை செய்யப்பட்ட இ - சிகரெட்டை திரிணமுல் காங்கிரஸ் எம்.பி.,க்கள் பலர் பார்லி.,யில் பயன்படுத்துகின்றனர்.
“அக்கட்சியை சேர்ந்த எம்.பி., ஒருவர் லோக்சபாவில் இ - சிகரெட்டை பிடித்தார். இது, பார்லி.,யின் ஒழுக்கத்தையும், தேசிய சட்டத்தையும் மீறுவதாகும்,” என்றார்.
யார் பெயரையும் குறிப்பிடாமல் இந்த குற்றச்சாட்டை அவர் முன்வைத்தார். இதையடுத்து, சம்பந்தப்பட்ட எம்.பி., மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பா.ஜ., - எம்.பி.,க்கள் வலியுறுத்தினர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திரிணமுல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் முழக்கங்கள் எழுப்பியதால், சபையில் பதற்றம் நிலவியது.
இதையடுத்து பேசிய சபாநாயகர் ஓம் பிர்லா கூறியதாவது:
பார்லி.,யின் சபைகளில் புகைப் பிடிப்பதற்கு எந்த அனுமதியும் யாருக்கும் வழங்கப்படவில்லை. அப்படி ஏதாவது நடந்திருந்தால் எழுத்துப்பூர்வமாக புகார் அளியுங்கள். எந்தவொரு புகாரும் தீவிரமாக ஆராயப்படும். குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டால் நடவடிக்கை நிச்சயம். நடத்தை விதிகள் அனைத்து எம்.பி.,க்களுக்கும் ஒரே மாதிரி பொருந்தும்.
சபையின் கண்ணியத்தை எம்.பி.,க்கள் அனைவரும் பேண வேண்டும். அரசியலமைப்பு விதிகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும். இதுபோன்ற பிரச்னை குறித்து, எம்.பி.,க்களிடம் இருந்து புகார் வந்தால் நிச்சயம் நான் நடவடிக்கை எடுப்பேன். இவ்வாறு அவர் கூறினார்.

