ADDED : மார் 15, 2024 10:30 PM

ராம்நகர்: ''பா.ஜ., - எம்.எல்.ஏ., முனிரத்னா, ராவணனை போன்றவர்,'' என, மாகடி காங்கிரஸ் எம்.எல்.ஏ., பாலகிருஷ்ணா, கோபமாக பேசி உள்ளார்.
மாகடியில் நேற்று அவர் அளித்த பேட்டி:
லோக்சபா தேர்தலில் பெங்களூரு ரூரல் தொகுதியில், ராமர் - ராவண யுத்தம் நடக்க போவதாக, பா.ஜ., - எம்.எல்.ஏ., முனிரத்னா கூறி உள்ளார். உண்மையான ராவணன், முனிரத்னா தான். ஹாசனை சேர்ந்த தேவகவுடா குடும்பத்தினர், ராம்நகர் மக்களை அடிமை போல் நடத்தி உள்ளனர்.
ராம்நகர் மாவட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்களை, குமாரசாமி ஒருமையில் பேசி திட்டுகிறார். தேவகவுடா குடும்பத்தினர் தங்களை அடிமை போல நடத்துவதாக, ஹாசன் ம.ஜ.த., தலைவர்களும்புலம்புகின்றனர்.
லோக்சபா தேர்தலில் ராம்நகர் மக்கள், சுயமரியாதைக்கு ஓட்டு போடுவார்களா? அடிமைத்தனம் செய்வோரை ஏற்பார்களா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
தேவகவுடா குடும்பத்தில் உள்ள அனைவரும், அரசியலில் இறங்கி விட்டனர்.
மக்கள் முதல்வராக இருந்தேன் என்று சொல்லிக் கொள்ளும் குமாரசாமிக்கு, பெங்களூரு ரூரல் தொகுதியில் போட்டியிட தைரியம் இல்லையா? அப்பாவியான டாக்டர் மஞ்சுநாத்தை, பா.ஜ.,விற்கு தாரைவார்த்து, அவரை பலிகடாவாக்க பார்க்கின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.

