ADDED : பிப் 20, 2024 07:01 AM
தங்கவயல்: மனைவியை கொலை செய்துவிட்டு தலைமறைவாக இருந்த கணவர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டனர்.
தங்கவயல் சஞ்சய்காந்தி நகரை சேர்ந்தவர் பவித்ரா. 28. இவர் கோரமண்டல் டாங்க் பிளாக் பகுதியை சேர்ந்த லோகேஷ், 32, என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஏழு ஆண்டுகள் சேர்ந்த வாழ்ந்தனர்.
2023ல் லோகேஷ், அவரது மூத்த சகோதரி பிரித்யா, 35, ஆகியோர் தன்னை வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவதாக உரிகம் போலீஸ் நிலையத்தில் பவித்ரா புகார் செய்தார். விவாகரத்து கேட்டு நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்தார்.
இந்நிலையில், தன் மீது கொடுத்துள்ள புகாரை வாபஸ் வாங்க வேண்டும் என்று பவித்ராவிடம் லோகேஷ் வலியுறுத்தி உள்ளார். அவர் மறுத்ததால், 14ம் தேதி கோரமண்டல் தபால் நிலையம் அருகில் உள்ள மைதானம் அருகில் வெட்டிக் கொலை செய்துவிட்டு தலைமறைவானார்.
இதுதொடர்பாக போலீசார் விசாரித்து லோகேஷ், அவரது சகோதரி பிரித்யாவை தேடி வந்தனர். இவர்களை நேற்று கைது செய்து தங்கவயல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

