நீட் தேர்வு வினாத்தாள் கசிவு திட்டமிட்ட சதி: அகிலேஷ் யாதவ் குற்றச்சாட்டு
நீட் தேர்வு வினாத்தாள் கசிவு திட்டமிட்ட சதி: அகிலேஷ் யாதவ் குற்றச்சாட்டு
ADDED : ஜூலை 02, 2024 12:04 PM

புதுடில்லி: இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கொடுக்கக் கூடாது என்பதற்காக அரசே திட்டமிட்டு நீட் தேர்வு வினாத்தாள் கசிய செய்ததாகவும், சம்பந்தப்பட்டவர்கள் மீது இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் லோக்சபாவில் தெரிவித்தார்.
ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் சமாஜ்வாதி கட்சி தலைவரும், எம்.பி.,யுமான அகிலேஷ் யாதவ் லோக்சபாவில் மேலும் பேசியதாவது:
தேர்வு வினாத்தாள்கள் கசிவது ஏன் தெரியுமா? நீட் வினாத்தாள் கசிவில் சம்பந்தப்பட்டவர்கள் மீது இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இளைஞர்களின் வேலைவாய்ப்புகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கொடுக்கக் கூடாது என்பதற்காக முன்னதாக அரசே திட்டமிட்டு இதை செய்கிறது என்பதே உண்மை.
ஓட்டுப்பதிவு இயந்திரத்தை நம்ப மாட்டோம்
மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தின் மீது முன்பும் நம்பிக்கையில்லை, இப்போதும் நம்பிக்கையில்லை. சமாஜ்வாதி கட்சி உத்தர பிரதேசத்தின் 80 லோக்சபா தொகுதிகளிலும் வென்றாலும் கூட மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தை நம்ப மாட்டோம். ஓட்டுப்பதிவு இயந்திரம் பற்றிய பிரச்னைகள் இன்னும் முடிந்துவிடவில்லை. அயோத்தியை உள்ளடக்கிய தொகுதியில் பெற்ற வெற்றியானது, இந்தியாவின் முதிர்ச்சியடைந்த வாக்காளர்களின் வெற்றி.
நாங்கள் ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு ஆதரவாக இருக்கிறோம். அக்னிவீர் திட்டத்தை ஒருபோதும் ஏற்க முடியாது. இண்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்ததும், அக்னிவீர் திட்டம் ரத்து செய்யப்படும். பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை சட்டப்பூர்வ உத்தரவாதம் அமல்படுத்தப்படவில்லை. தோட்டக்கலை பயிர்களுக்கும் குறைந்தபட்ச ஆதார விலை வழங்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.