டில்லி குண்டு வெடிப்பு சம்பவம்: காஷ்மீரில் 8 இடங்களில் என்ஐஏ ரெய்டு
டில்லி குண்டு வெடிப்பு சம்பவம்: காஷ்மீரில் 8 இடங்களில் என்ஐஏ ரெய்டு
ADDED : டிச 01, 2025 10:59 AM

ஸ்ரீநகர்: டில்லி கார் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக, ஜம்மு-காஷ்மீரில் 8 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
டில்லியின் செங்கோட்டை பகுதியில், கடந்த நவம்பர் 10ம் தேதி மாலை, கார் ஒன்று திடீரென வெடித்து சிதறியதில், 15 பேர் உயிரிழந்தனர். காரை ஓட்டியவர் ஜம்மு காஷ்மீரின் புல்வாமாவைச் சேர்ந்த டாக்டர் உமர் நபி என்பதும், தற்கொலைப் படையாக மாறி, அவர் இந்த தாக்குதலில் ஈடுபட்டதும் தெரிய வந்தது.
நாட்டையே உலுக்கிய இந்த பயங்கரவாத தாக்குதல் குறித்து, என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு அமைப்பு விசாரிக்கிறது. இது தொடர்பாக ஏழு பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இந்த சம்பவத்தில், விசாரணையின் மையப்புள்ளியாக அல் பலாஹ் பல்கலை உள்ளது.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் அல் பலாஹ் மருத்துவ பல்கலையைச் சேர்ந்தவர்கள் ஆவர். குண்டுவெடிப்பு சம்பவத்தின் பின்னணியில் இருப்பவர்களை கண்டுபிடிக்க என்ஐஏ அதிகாரிகள் விடா முயற்சியாக உள்ளனர். இந்நிலையில் இன்று ஜம்மு-காஷ்மீரில் 8 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது: காஷ்மீரின் புல்வாமா, ஷோபியன் மற்றும் குல்காம் மாவட்டங்களில் 8 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. செங்கோட்டை அருகே நடந்த கார் குண்டுவெடிப்புக்கு பின்னணியில் இருந்த, பயங்கரவாதிகள் குறித்து விசாரணை நடந்து வருகிறது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

