பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் வழக்கு; என்.ஐ.ஏ.,விடம் ஒப்படைப்பு
பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் வழக்கு; என்.ஐ.ஏ.,விடம் ஒப்படைப்பு
UPDATED : ஏப் 27, 2025 10:37 AM
ADDED : ஏப் 27, 2025 06:53 AM

ஸ்ரீநகர்: பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் வழக்கு விசாரணையை தேசிய புலனாய்வு முகமையிடம் (என்.ஐ.ஏ) மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்படைத்தது. தாக்குதல் நடந்த இடத்தில் ஆதாரங்களை தேடும் பணியில் என்.ஐ.ஏ., அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
காஷ்மீரின் பஹல்காமின் பைசரன் பகுதியில் கடந்த22ம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்துள்ளனர். இதில் ஒருவர் நேபாளத்தை சேர்ந்தவர். இந்த சம்பவம் நாடு முழுவதும் மக்கள் மத்தியில் கடும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவத்தில் குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்கப்படும் என பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அமித்ஷா உறுதி அளித்துள்ளனர்.
சம்பவத்தில் ஈடுபட்டதாக சந்தேகப்படும் பயங்கரவாதிகளின் வீடுகளை பாதுகாப்பு படையினர் இடித்து தரைமட்டமாக்கி அதிரடி நடவடிக்கை எடுத்தனர். தாக்குதல் நடந்த இடத்தில் என்.ஐ.ஏ., அதிகாரிகள் முகாமிட்டு ஆய்வு செய்தனர். தற்போது, வழக்கு விசாரணையை தேசிய புலனாய்வு முகமையிடம் (என்.ஐ.ஏ) மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்படைத்தது. இது குறித்து வழக்குப்பதிவு செய்து என்.ஐ.ஏ., அதிகாரிகள் விசாரணையை துவங்குவார்கள்.
வழக்கு குறித்து முக்கிய ஆவணங்கள், எப்.ஐ.ஆர்., நகல் ஆகியவற்றை என்.ஐ.ஏ., அதிகாரிகளிடம் ஜம்மு காஷ்மீர் போலீசார் ஒப்படைத்தனர். இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது: கடந்த 48 மணி நேரத்தில் பல பயங்கரவாதிகளின் வீடுகள் இடிக்கப்பட்டுள்ளன. பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு உதவிய ஆதரவாளர்களுக்கு எதிராகவும், இதே போன்ற நடவடிக்கை எடுக்கப்படும், என்றனர்.

