போரை நிறுத்தும்படி எந்த உலகத்தலைவரும் சொல்லவில்லை : பிரதமர் மோடி திட்டவட்டம்
போரை நிறுத்தும்படி எந்த உலகத்தலைவரும் சொல்லவில்லை : பிரதமர் மோடி திட்டவட்டம்
UPDATED : ஜூலை 29, 2025 08:22 PM
ADDED : ஜூலை 29, 2025 06:57 PM

புதுடில்லி: '' ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது, தாக்குதலை நிறுத்தும்படி  உலகின் எந்தத் தலைவரும் சொல்லவில்லை,'' என பிரதமர் மோடி கூறினார்.
முழு சுதந்திரம்
 
லோக்சபாவில் ' ஆபரேஷன் சிந்தூர்' தொடர்பான விவாத்தில் பிரதமர் மோடி பேசியதாவது: பாகிஸ்தானால் இனி அணு ஆயுதஅச்சுறுத்தல் விட முடியாது. இந்தியா ஒரு போதும் பயப்படாது.  இந்த மிரட்டலுக்கு இந்தியா அடிபணியவில்லை. இனி யாரும் நம்மிடம் அணு ஆயுத மிரட்டல் விட முடியாது. எதிரிகளை நமது படையினர் நிலைகுலையச் செய்தனர். இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள், ட்ரோன்கள் மூலம் பாகிஸ்தான் பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன. முழு சுதந்திரம் கொடுத்ததால்  இந்திய ராணுவம் சிறப்பாக செயல்பட்டு வெற்றியை ஈட்டியது. முப்படைகளும் கூட்டாக இணைந்து செயல்பட்டன. பாகிஸ்தானின் சில விமான படை தளங்கள் இன்னும் ஐசியூ.,வில் உள்ளது. பஹல்காம் தாக்குதல் நடந்ததும், இந்தியா பதிலடி தரும் பாகிஸ்தானுக்கு தெரிந்துவிட்டது.
இந்தியா பதிலடி
'ஆபரேஷன் சிந்தூர்' மூலம் இந்தியாவின் வலிமையை உலக நாடுகள் உணர்ந்து கொண்டுள்ளன.  பாகிஸ்தான் வாலாட்டி பார்த்தது. ஆனால் மண்டியிட வைத்தோம்.  இந்தியாவின் நடவடிக்கைக்கு எந்த நாடுகளும் ஆட்சேபனை தெரிவிக்கவில்லை. ஐ.நா.,வில் உள்ள  193 நாடுகளில் 3 நாடுகள் மட்டுமே பாகிஸ்தானுக்கு ஆதரவு அளித்தன.  22 நிமிடங்களில் பாகிஸ்தானை பழிதீர்த்தோம். இந்தியாவின் நடவடிக்கையால் பயங்கரவாதிகள் கதறி துடித்தனர். பயங்கரவாதிகள் மீதான நடவடிக்கையை எந்த நாடும் கண்டிக்கவில்லை. பயங்கரவாதிகள், பயங்கரவாதத்தில் ஈடுபடும் நாடுகளை பிரித்துப் பார்க்க முடியாது. இனி இந்தியா பதிலடி கொடுக்கும் என பயங்கரவாதிகளுக்கு தெரிந்துவிட்டது.
கடுமையான பதிலடி
ஆபரேஷன் சிந்தூரின் வெற்றியை 100 சதவீதம் விமானப்படை உறுதி செய்தது. இந்த நடவடிக்கையின் குறிக்கோள் மிகத்தெளிவாக இருந்தது.  எங்கள் இலக்கு பயங்கரவாதத்துக்கு எதிரானது என உலகத்துக்கே தெரிவித்துவிட்டோம். பாகிஸ்தானை மண்டியிட வைத்தோம். பயங்கரவாத்தின் மையத்தை ரோடு அழித்துவிட்டோம். பதிலடியை நிறுத்துங்கள் என பாகிஸ்தான் ராணுவம் கெஞ்சியது. தயவு செய்து நிறுத்துங்கள். இதற்கு மேல் தாங்க முடியாது என கதறியது. நமது பதிலடியை பல ஆண்டுகளுக்கு காங்கிரஸ் நினைவில் வைத்து இருக்கும்.பாக்.,இனி என்ன செய்தாலும் கடுமையான பதிலடி கொடுக்கப்படும். முழு சக்தியுடன் இந்தியா தொடர்ந்து முன்னேறுகிறது. 'ஆபரேஷன் சிந்தூர்'நடவடிக்கை இன்னும் தொடர்கிறது. பாகிஸ்தான் மீண்டும் வாலாட்ட நினைத்தால் தக்க பதிலடி கொடுக்கப்படும்.
தேசிய பாதுகாப்புக்கு காங்கிரசிடம் முன்பு எந்த கொள்கையும் இல்லை. தற்போது இருக்கிறதா  என்ற கேள்வியே இல்லை.  ஆக்கிரிமப்பு காஷ்மீரை  ஏன் இன்னும் மீட்கவில்லை என கேட்பவர்கள், அது ஏன் போனது என்பதற்கு  காங்கிரஸ் விளக்கம் அளிக்க வேண்டும்.
சீர்திருத்தம்
முன்பு இல்லாத அளவுக்கு  கடந்த தசாப்தங்களில் ஆயுதப்படைகளில் இந்தியா சீர்திருத்தம் மேற்கொண்டது. பாதுகாப்பு துறையில் தனியார் அனுமதிக்கப்பட்டன. நமது ஆயுதப்படைகள் எப்படி  அதிகாரம் பெற்றுள்ளன என்பதை ஆபரேஷன் சிந்தூர் பிரதிபலிக்கிறது.  காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போது, தன்னிறைவு பற்றி சிந்திக்கவில்லை. ஒவ்வொரு பாதுகாப்பு ஒப்பந்தத்திலும் தங்களுக்கு ஆதாயத்தை எதிர்பார்த்தனர்.  இன்றும் தன்னிறைவு பெறுவதை கிண்டல் செய்கின்றனர்.
சிந்தூர் முதல் சிந்து வரை நாம் பாகிஸ்தானுக்கு எதிராக நடவடிக்கை எடுத்தோம். இந்தியாவில் பயங்கரவாத தாக்குதல் நடத்தியவர்கள்  மற்றும் பாகிஸ்தான் உட்பட அனைவரும் அதிக விலை கொடுக்க வேண்டியிருக்கும் என   ஆபரேஷன் சிந்தூர் எடுத்துக் காட்டியது.
ராணுவத் தளவாடங்கள் உள் நாட்டிலேயே உற்பத்தியாகிறது. அவை உடனே ராணுவத்திற்குக் கிடைக்கின்றன.  பாதுகாப்புத்துறைக்கான உள்நாட்டு தயாரிப்புகள் என்பது வெறும் கோஷமல்ல; இதற்காக கொள்கையை மாற்றியுள்ளோம்.  தெளிவான கண்ணோட்டத்துடன் முன்னேறிக் கொண்டிருக்கிறோம்; காங் ஆட்சியில் இதற்கு முக்கியத்துவம் தரப்படவில்லை.
சிந்து நதிநீர் ஒப்பந்தம்
உலக வங்கியை நேரு அனுமதித்ததால், சிந்து நதிநீர் பாகிஸ்தானுக்குள சென்றது. இது இந்தியாவில் உற்பத்தி ஆகிறது.  இந்த நீரில் 80 சதவீதத்தை பாகிஸ்தானுக்கு வழங்க ஒப்புக் கொண்டார்.அதில் 20 சதவீதம் மட்டுமே நம்மால் பயன்படுத்த முடியும்.ரத்தமும், நீரும் ஒரே நேரத்தில் பாயமுடியாது என்று கூறி, அந்த ஒப்பந்தம் இப்போது கிடப்பில் போடப்பட்டது; இனி உள்நாட்டு விவசாயிகள் பயனடைவார்கள்.
காங்கிரசின் குறிக்கோள்
இந்தியாவின் நிலங்களை  பாக், சீனாவிடம் நேரு தாரைவார்த்தார். இலங்கைக்கு கச்சத்தீவை பரிசாகக் கொடுத்தது காங்கிரஸ்; இன்று வரை தமிழக மீனவர்கள் பிரச்னைகளைச் சந்திக்கிறார்கள். அவர்களின் உரிமை பறிக்கப்பட்டு, அடுத்த நாட்டிற்குப் பரிசாக வழங்கப்பட்டுள்ளது. இது தான் காங்கிரசின் குறிக்கோள் . மும்பை தாக்குதல் சம்பவத்துக்கு பிறகும் காங்கிரஸ் செயல்படவில்லை. நேருவை விமர்சனம் செய்வதால் காங்கிரஸ் அதிருப்தியில் உள்ளது.
இந்தியா புத்தரின் நிலம். போருக்கான நிலம் கிடையாது. நாம் வளர்ச்சியையும், அமைதியையும் விரும்புகிறோம். அதேநேரத்தில் அமைதி மற்றும் வளர்ச்சி என்பது பலம் என்ற பாதையில் நிறைவேறும் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. இவ்வாறு அவர் பேசினார்

