ADDED : அக் 20, 2025 05:02 AM

அயோத்தி: உத்தர பிரதேசத்தின் அயோத்திக்கு கடந்த ஆறு மாதங்களில், 23.82 கோடிக்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகை புரிந்துள்ளனர். இதன் வாயிலாக, முன் எப்போதும் இல்லாத வகையில் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக மாநில அரசு தெரிவித்துள்ளது.
உ.பி.,யின் அயோத்தியில் கட்டப்பட்ட பிரமாண்ட ராமர் கோவிலுக்கு கடந்த ஆண்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு, தரிசனம் மேற்கொள்ள பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இதையடுத்து, இக்கோவிலுக்கு வழிபட தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை புரிகின்றனர். இந்நிலையில், உ.பி., சுற்றுலா துறை சமீபத்தில் வெளியிட்ட அறிக்கை:
அயோத்தி ராமர் கோவிலை காண, உள்ளூர் மட்டுமின்றி வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களும் மிகவும் ஆர்வமுடன் உள்ளனர். குறிப்பாக இங்கு ஆண்டுதோறும் நடக்கும் தீபத்திருவிழா தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும் அயோத்தியின் ஈர்ப்பை அதிகரித்துள்ளது.
இதன்படி தீபத்திருவிழாவை காண, முதல் ஆண்டான 2017ல், 1.78 கோடி பேர் வருகை புரிந்தனர். இதுவே, 2018ல் 1.95 கோடியாகவும்; 2019ல் 2.05 கோடியாகவும் உயர்ந்தது.
கடந்த ஆண்டு, 16.44 கோடி பார்வையாளர்களாக அதிகரித்தது. இந்த எண்ணிக்கை, உள்நாடு மற்றும் சர்வதேச அளவில் பார்வையாளர்களின் வருகை அதிகரித்து இருப்பதையே பிரதிபலிக்கிறது.
நடப்பாண்டில், ஜனவரி முதல் ஜூன் வரையிலான காலக்கட்டத்தில் மட்டும் இந்த எண்ணிக்கை, 23.82 கோடிக்கும் மேற்பட்ட பார்வையாளர்களாக அதிகரித்துள்ளது. இதற்கிடையே தீப திருவிழா வாயிலாக லட்சக்கணக்கான பக்தர்கள் அயோத்தி நகருக்கு வருகை தருவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.