நக்சல் இல்லாத மாவட்டமாக ஒடிஷாவின் நவ்ரங்பூர் அறிவிப்பு
நக்சல் இல்லாத மாவட்டமாக ஒடிஷாவின் நவ்ரங்பூர் அறிவிப்பு
ADDED : ஜன 24, 2026 11:53 PM
புவனேஸ்வர்: சத்தீஸ்கரில் ஒன்பது நக்சல்கள் சரணடைந்த நிலையில், அண்டை மாநிலமான ஒடிஷாவில் உள்ள நவ்ரங்பூர் மாவட்டம் நக்சல் இல்லாத மாவட்டமாக அறிவிக்கப் பட்டது.
சத்தீஸ்கரின் தம்தரி மாவட்டம் மற்றும் ஒடிஷாவின் நவ்ரங்பூர் பகுதியில் பல்வேறு வன்முறை செயல்களில் ஈடுபட்டதால், 47 லட்சம் ரூபாய் பரிசு அறிவிக்கப்பட்டு தேடப்பட்டு வந்த ஏழு பெண்கள் உட்பட ஒன்பது நக்சல்கள் நேற்று முன்தினம் போலீசில் சரணடைந்தனர்.
சரணடைந்த ஒன்பது நக்சல்களும் நவ்ரங்பூரில் தீவிரமாக செயல்பட்டு வந்தவர்கள். இவர்கள் சரணடைந்ததன் மூலம் நவ்ரங்பூர் மாவட்டம் நக்சல் இல்லாத மாவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
இது குறித்து போலீசார் மேலும் கூறிய தாவது:
ஒடிஷாவின் ராய்காரில் உள்ள குண்டே போலீஸ் ஸ்டேஷனை, 2010 ஜூலை 16ல் நக்சல்கள் தாக்கினர்.
மேலும், 2011 செப்., 24ல் பிஜு ஜனதா தள எம்.எல்.ஏ., ஜகபந்து மஜி மற்றும் அவரது தனி செயலர் பட்ரோ ஆகியோர் குண்டு வைத்து கொல்லப்பட்டது உள்ளிட்ட பல்வேறு வன்முறை சம்பவங்கள் நவ்ரங்பூர் மாவட்டத்தில் நடந்துள்ளன.
இந்நிலையில், நவ்ரங்பூர் மாவட்டத்தில் செயல்பட்ட ஒன்பது நக்சல்களும் சரணடைந்தனர். இதனால், ஒடிஷாவில் மொத்தமுள்ள 30 மாவட்டங்களில், கந்தமால், கலாஹண்டி, போலங்கீர், மால்கங்கிரி, கோரபுட், ராயகடா மற்றும் போத் ஆகிய ஏழு மாவட்டங்களில் மட்டும் நக்சல்கள் குறைந்த அளவில் செயல்படுகின்றனர்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

