பழைய கார்கள் விவகாரம்; டில்லி அரசுக்கு கண்டிப்பு
பழைய கார்கள் விவகாரம்; டில்லி அரசுக்கு கண்டிப்பு
ADDED : டிச 18, 2025 12:37 AM

'பழைய கார்களை வைத்து இன்னும் பல பயங்கரவாத தாக்குதல்களை நடத்தி முடித்த பின் தான் நடவடிக்கை எடுப்பீர்களா?' என, டில்லி அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
பயன்படுத்தப்பட்ட கார்களை விற்பனை செய்யும் டீலர்களை ஒழுங்குபடுத்துவது தொடர்பாக டில்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், 'நாடு முழுதும், 40,000க்கும் மேற்பட்ட டீலர்கள் பயன்படுத்தப்பட்ட கார்களை விற்பனை செய்கின்றனர். அவர்களை ஒழுங்குபடுத்த, மத்திய மோட்டார் வாகன விதிகளை செயல்படுத்த உத்தரவிட வேண்டும்' என, குறிப்பிடப்பட்டது.
இந்த மனுவை நேற்று விசாரித்த உயர் நீதிமன்றம், 'டில்லி செங்கோட்டையில் நடந்த கார் குண்டு வெடிப்பு தாக்குதலில் பழைய கார் தான் பயன்படுத்தப்பட்டுள்ளது. இன்னும் இதுபோல பல பயங்கரவாத சம்பவங்கள் நிகழ்ந்த பிறகு தான் அவற்றை விற்பது தொடர்பாக நடவடிக்கை எடுப்பீர்களா?' என, டில்லி அரசை கடிந்து கொண்டது. மேலும், இது குறித்து பதிலளிக்கும்படி, டில்லி அரசுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது.
-டில்லி சிறப்பு நிருபர்-

