பார்லி., கூட்டத்தொடர் தொடங்கிய முதல் நாளே... அக்கப்போர்! துணை ஜனாதிபதியை வைத்து பா.ஜ., - காங்., வாக்குவாதம்
பார்லி., கூட்டத்தொடர் தொடங்கிய முதல் நாளே... அக்கப்போர்! துணை ஜனாதிபதியை வைத்து பா.ஜ., - காங்., வாக்குவாதம்
UPDATED : டிச 01, 2025 11:53 PM
ADDED : டிச 01, 2025 11:48 PM

பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடர் துவங்கிய முதல் நாளான நேற்று, முன்னாள் துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கரை முன்வைத்து பா.ஜ., - காங்கிரஸ் கட்சிகள் இடையே கடும் வாக்குவாதம் மூண்டது. இதனால், சபையில் அனல் பறந்தது.
பீஹார் தேர்தல் முடிந்து, நாடு முழுதும் 12 மாநிலங்களில், எஸ்.ஐ.ஆர்., எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி நடந்து வரும் நிலையில், பார்லி.,யின் குளிர்கால கூட்டத்தொடர் நேற்று துவங்கியது.
வரும் 19ம் தேதி வரை நடக்கும் இந்த கூட்டத் தொடரில், முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்ட மிட்டுள்ளது.
எஸ்.ஐ.ஆர்., விவகாரம்
அதே போல், டில்லி செங்கோட்டையில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவம், புதிய தொழிலாளர் சட்டங்கள், எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் மசோதாக்கள் மீது கவர்னர்கள் முடிவெடுப்பதில் தாமதம், எஸ்.ஐ.ஆர்., விவகாரம் ஆகியவற்றை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.
இதனால், குளிர்கால கூட்டத்தொடரில் புயல் அடிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில், பார்லி., நேற்று கூடியதும், துணை ஜனாதிபதியாக பதவியேற்ற சி.பி.ராதாகிருஷ்ணன், ராஜ்யசபா தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார்.
இதையடுத்து, முதல் முறையாக ராஜ்யசபாவை வழிநடத்த வந்தவரை வாழ்த்தி வரவேற்கும் விவாதம் நடந்தது.அப்போது, பிரதமர் மோடி பேசியதாவது:
துணை ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் மிகச் சாதாரண குடும்பத்தைச் சேர்ந்தவர். ஜார்க்கண்ட், மஹாராஷ்டிரா, தெலுங்கானா, புதுச்சேரி என முற்றிலும் மாறுபட்ட மாநிலங்களில் பணியாற்றும் வாய்ப்பு ஒரு சிலருக்கே கிடைக்கும். அது அவருக்கு கிடைத்தது.
ஜார்க்கண்டில் பழங்குடியின மக்களை அவர்களின் கிராமங்களுக்கே சென்று சந்தித்தவர். ஹெலிகாப்டர் கிடைக்காவிட்டாலும், கிடைத்த வாகனத்தில் ஏறிச் சென்று மக்களை சந்திக்கும் எளிமையானவர்.
பெரிய பதவிகளுக்கு வந்துவிட்டால், சில மரபுகளை கடைப்பிடிப்பது வழக்கம். ஆனால், நம் துணை ஜனாதிபதி எளிமை ஒன்றை மட்டுமே தன் பொது வாழ்வில் கடைப்பிடித்து வருகிறார்.
தீவிர அசைவப் பிரியராக இருந்தவர்; காசிக்கு சென்று கங்கைக்கு பூஜை செய்து முடித்ததும், ஏதோ உள்ளுணர்வு ஏற்பட, அன்று முதல் அசைவம் சாப்பிடுவதையே நிறுத்திவிட்டார் என கேள்வி பட்டேன்.
அந்த தொகுதியின் எம்.பி., என்ற முறையில், அவரது ஆன்மிக உணர்வு என்னை வியப்பில் ஆழ்த்திவிட்டது.
நெருக்கடி நிலையை தீவிரமாக எதிர்த்தவர். ஜனநாயகத்தை ஆதரிப்பவர்கள், அவரை எப்போதும் ஆதரிப்பர். துணை ஜனாதிபதியாக அவரது பணி மிகச் சிறப்பாக இருக்கும் என நம்புகிறேன்.
பாரபட்சம்
இவ்வாறு அவர் பேசினார்.
இதை தொடர்ந்து, காங்கிரஸ் மூத்த தலைவரும், ராஜ்யசபா எதிர்க்கட்சித் தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே பேசியதாவது:
நாட்டின் முதல் ஜனாதிபதியான சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் முதன் முதலாக உரையாற்றியபோது, 'நான் எந்த கட்சியையும் சார்ந்தவன் அல்ல; அனைத்து கட்சிகளையும் சார்ந்தவன். சபையின் கண்ணியத்தையும், பார்லிமென்ட் ஜனநாயகத்தையும் காப்பேன்' என கூறியிருந்தார்.
அவரது பெயர் கொண்ட நீங்களும், அதே கொள்கையை பின்பற்றுவீர்கள் என நம்புகிறேன். சபையில் பாரபட்சம் இல்லாமல் அனைவருக்கும் வாய்ப்பு வழங்கினால், சுமுகமாக நடத்துவதற்கு முழு ஒத்துழைப்பை தர தயாராக இருக்கிறோம்.
இதற்கு முன், ராஜ்யசபா தலைவராக இருந்தவர் திடீரென பதவியிலிருந்து விலகினார். பார்லிமென்ட் வரலாற்றில் அப்படி நடந்ததே இல்லை. அவருக்கு பிரிவு உபசார விழா நடத்துவதற்கு கூட, இந்த சபைக்கு வாய்ப்பு கிடைக்காமல் போனது; அதை கண்டு மனம் வெதும்பினோம்.இவ்வாறு அவர் பேசினார்.
முன்னாள் துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கரை குறிப்பிட்டு, மல்லிகார்ஜுன கார்கே இப்படி பேசியதற்கு, பா.ஜ., - எம்.பி.,க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
கார்கேவின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த பார்லி., விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, ''புதிய தலைவரை வரவேற்று பேசும் நிகழ்வில், தேவையற்ற விஷயங்களை எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிடுகிறார். அவரது பேச்சு துரதிருஷ்டவசமானது. முன்னாள் தலைவரை காங்கிரசார் தான் அவமானப்படுத்தினர்.
''அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்ததும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தான். அவருக்கு எதிராக பேசிய வார்த்தைகளை எல்லாம் மறந்துவிட்டு, தற்போது ஆதரவாக இருப்பது போல பேசுவது நியாயமல்ல,'' என்றார்.
...
சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டா கூறும்போது, ''எதிர்க்கட்சித் தலைவர் தேவையில்லாத விஷயங்களை பேசுவது ஏற்புடையது அல்ல. ராஜ்யசபாவில் முன்னாள் தலைவராக இருந்தவர் மீது ஒரு முறை அல்ல; இரு முறை நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்துவிட்டு, தற்போது வேறு மாதிரி பேசுகிறீர்கள். சட்டசபை தேர்தல்களில் கிடைக்கும் தொடர் தோல்வி, உங்களை வெகுவாக விரக்தி அடைய வைத்துவிட்டது,'' என்றார்.
குளிர்கால கூட்டத் தொடரின் முதல் நாள் அன்றே, முன்னாள் துணை ஜனாதிபதி விவகாரத்தில் ஆளுங்கட்சியும், எதிர்க்கட்சியும் மாறி மாறி கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், சபையில் சலசலப்பு ஏற்பட்டது.
-- நமது டில்லி நிருபர் -

