ஒவ்வொரு ஆண்டும் ஒருவர் பிரதமரா?: இண்டியா கூட்டணி பற்றி அமித்ஷா கிண்டல்
ஒவ்வொரு ஆண்டும் ஒருவர் பிரதமரா?: இண்டியா கூட்டணி பற்றி அமித்ஷா கிண்டல்
ADDED : ஏப் 29, 2024 12:13 PM

புதுடில்லி: 'இண்டியா கூட்டணி வெற்றி பெற்றால், ஒவ்வொரு ஆண்டும் ஒருவர் பிரதமராக இருப்பார்கள்' என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா விமர்சனம் செய்துள்ளார்.
பா.ஜ.,வுக்கு எதிரான ஓட்டுகளை ஒருங்கிணைத்தால் மட்டுமே, தேர்தலில் வீழ்த்த முடியும் என பெரும்பாலான எதிர்க்கட்சிகள் உணர்ந்தன. அதன் விளைவாக 28 கட்சிகள் இடம் பெற்ற இண்டியா கூட்டணி உருவானது. காங்கிரஸ், தி.மு.க., கம்யூனிஸ்ட், ஆம்ஆத்மி உள்ளிட்ட, 28 கட்சிகள் இணைந்து, 'இந்தியா' என்ற பெயரில் கூட்டணியை உருவாக்கியுள்ளன.
இந்நிலையில், இண்டியா கூட்டணி குறித்து, தனியார் செய்தி நிறுவனத்திற்கு அமித்ஷா அளித்த பேட்டி: இண்டியா கூட்டணி ஆட்சி அமைத்தால் ஓராண்டுக்கு முதல்வர் ஸ்டாலின் பிரதமராக இருப்பார். தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் ஓராண்டுக்கு பிரதமராக இருப்பார். திரிணமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி ஓராண்டு பிரதமராக இருப்பார். ஏதேனும் ஒரு ஆண்டு மிச்சம் இருந்தால் ராகுல் பிரதமராக இருப்பார்.
நிலைத்தன்மை
இண்டியா கூட்டணி கூறுவது போல், ஒரு நாட்டை இவ்வாறெல்லாம் நடத்த முடியாது. 30 ஆண்டுகளாக ஸ்திரத்தன்மையற்ற ஆட்சி நடைபெற்றதால், நாடு அதற்கான விலையை கொடுத்தது. கடந்த 10 ஆண்டுகளில் வலிமையான தலைவர் கிடைத்ததன் மூலம் அரசியல் நிலைத்தன்மை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

