ஆன்லைன் முன்பதிவு அதிகரிக்கப்படாது தேவசம் போர்டு தலைவர் திட்டவட்டம்
ஆன்லைன் முன்பதிவு அதிகரிக்கப்படாது தேவசம் போர்டு தலைவர் திட்டவட்டம்
ADDED : நவ 30, 2024 02:37 AM
சபரிமலை:சபரிமலையில் ஆன்லைன் முன்பதிவு எண்ணிக்கையை அதிகரிக்கும் திட்டம் இல்லை என திருவிதாங்கூர் தேவசம்போர்டு தலைவர் பி.எஸ்.பிரசாந்த் கூறினார்.
சபரிமலையில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
நடை திறந்து 12 நாட்களில் ஒன்பது லட்சத்து 13 ஆயிரத்து 437 பேர் தரிசனம் நடத்தியுள்ளனர். கடந்த ஆண்டு இதே கால அளவில் ஐந்து லட்சத்து 53 ஆயிரத்து 922 பக்தர்கள் மட்டுமே தரிசனம் செய்திருந்தனர். நீண்ட நேர காத்திருப்பு இல்லாமல் தரிசனம் நடத்தி செல்கின்றனர்.
நவ.,28-ல் அதிகபட்சமாக 87 ஆயிரத்து 992 பேர் தரிசனம் நடத்தினர். இதில் ஸ்பாட் புக்கிங் மூலம் வந்தவர்கள் 16,282 பேர். காணிக்கையாக 63.01 கோடி ரூபாய் கிடைத்துள்ளது கடந்த சீசனில் இது 47.12 கோடி ரூபாயாக இருந்தது. 15.89கோடி ரூபாய் கூடுதலாக வருமானம் வந்துள்ளது.
ஆன்லைன் முன்பதிவு மூலம் 70 ஆயிரம் பேரும் ஸ்பாட் புக்கிங் மூலம் 10 ஆயிரம் பேரும் அனுமதிக்கப் படுகின்றனர். ஸ்பாட் புக்கிங்கில் கூடுதலாகவும் அனுமதிக்கப்படுகின்றனர். ஆன்லைன் முன்பதிவை 80 ஆயிரமாக அதிகரித்தால் கடந்த ஆண்டு போல் பல பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. 90 ஆயிரம் கடந்தால் பக்தர்களின் நீண்ட கியூ மரக் கூட்டத்தையும் தாண்டி விடும். எனவே ஆன்லைன் முன்பதிவு எண்ணிக்கையை அதிகரிக்கும் திட்டம் இல்லை.
பம்பையில் ஸ்பாட் புக்கிங்குக்காக ஆறு கவுன்டர்கள் உள்ளது. இங்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் அமருவதற்கு பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.
மாளிகைபுரத்தில் தேங்காய் உருட்டுவது,மஞ்சள் பொடி தூவுவது, பிளவுஸ் துணிகளை வீசுவது போன்ற செயல்களை தடுக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவர்.
பந்தளம் சாஸ்தா கோயிலில் ஸ்பாட் புக்கிங் கவுன்டர் தொடங்குவது பற்றி ஆலோசிக்கப்படும். தற்போதுள்ள நிலவரப்படி அதிகபட்சமாக பக்தர்கள் ஒன்றரை மணி நேரம்தான் கியூ நிற்கின்றனர்.
மதியம் ஒரு மணிக்கும், இரவு 11:00 மணிக்கும் நடை அடைக்கும் போது கடைசி நேரத்தில் படி ஏறுகின்ற பக்தர்களுக்கு தரிசனம் கிடைக்காத சூழ்நிலையை கருத்தில் கொண்டு அந்த நேரத்தில் நிற்கும் அனைத்து பக்தர்களும் தரிசிக்க சில நிமிடங்கள் கூடுதலாக நடை திறந்து வைக்க மேல் சாந்திகளிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.