ஆன்லைன் சூதாட்ட செயலி மோசடி: தமன்னாவிடம் பல மணி நேரம் விசாரணை
ஆன்லைன் சூதாட்ட செயலி மோசடி: தமன்னாவிடம் பல மணி நேரம் விசாரணை
ADDED : அக் 19, 2024 12:16 AM

குவஹாத்தி: 'எச்.பி.இசட்., டோக்கன்' செயலி தொடர்பாக, பிரபல நடிகை தமன்னாவிடம் அமலாக்கத் துறை அதிகாரிகள் பல மணி நேரம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.
மகாதேவ் ஆன்லைன் சூதாட்ட செயலியுடன் தொடர்புடைய, எச்.பி.இசட்., டோக்கன் என்ற செயலியின் உரிமையாளர்கள், '57,000 ரூபாய் முதலீடு செய்தால், தினமும் 4,000 ரூபாய் வீதம் மூன்று மாதங்களுக்கு வழங்கப்படும்' என, ஆசை வார்த்தைகளை கூறி ஏராளமான மக்களிடம் பணம் வசூலித்தனர்.
'பிட்காயின், கிரிப்டோகரன்சி'யில் பணத்தை முதலீடு செய்வதாகக் கூறி, மக்கள் கொடுக்கும் பணத்திற்கு ஒருமுறை மட்டும், 4,000 ரூபாய் கொடுத்துவிட்டு, பின் பல்வேறு நிபந்தனைகளை விதித்து அவர்களை ஏமாற்றி உள்ளனர்.
இது தொடர்பாக, வட கிழக்கு மாநிலமான நாகாலாந்தின் கோஹிமா போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதில் நடந்த சட்ட விரோதப் பணப் பரிமாற்றம் குறித்து, அமலாக்கத் துறை வழக்குப் பதிந்து விசாரிக்கிறது.
இந்த மோசடி தொடர்பாக, நாடு முழுதும் சோதனை நடத்திய அமலாக்கத் துறையினர், 455 கோடி ரூபாய் டிபாசிட் மற்றும் அசையா சொத்துக்களை பறிமுதல் செய்தனர்.
இந்த மோசடிக்காக, 299 போலி கம்பெனிகள் திறக்கப்பட்டதும், அவற்றில், 76 கம்பெனிகள் சீனாவைச் சேர்ந்தவர்களால் நடத்தப்பட்டு வந்ததும் தெரியவந்தது.
மோசடியில் ஈடுபட்ட எச்.பி.இசட்., டோக்கன் செயலி நடத்திய விளம்பர நிகழ்ச்சியில், பிரபல நடிகை தமன்னா பங்கேற்று, அதற்கு கணிசமான தொகையை பெற்றது தெரியவந்தது. இது தொடர்பாக விளக்கமளிக்கும்படி, அமலாக்கத் துறையினர் நடிகை தமன்னாவுக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். ஆனால், பணி காரணமாக அவர் ஆஜராகவில்லை.
இந்நிலையில், எச்.பி.இசட்., டோக்கன் செயலி விவகாரம் தொடர்பாக, அசாமின் குவஹாத்தியில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில், நடிகை தமன்னா நேற்று முன்தினம் நேரில் ஆஜரானார்.
அதிகாரிகள், அவரிடம் பல மணி நேரம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தியதாகக் கூறப்படுகிறது.
இந்த விவகாரத்தில் தமன்னா மீது எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை.