ADDED : அக் 21, 2024 11:08 PM

சபரிமலை : சபரிமலை பக்தர்களின் வசதிக்காக திருவிதாங்கூர் தேவசம்போர்டு ஆன்லைன் ரேடியோ அறிமுகம் செய்கிறது. இதற்காக தேவசம்போர்டு டெண்டர் கோரியுள்ளது.
சபரிமலையில் மண்டல காலம் நவம்பர் மாதம் 16-ல் தொடங்குகிறது. இதற்கான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
பக்தர்களின் வசதிக்காக இந்த ஆண்டு முதல் ஆன்லைன் ரேடியோ சேவையை தொடங்க திருவிதாங்கூர் தேவசம்போர்டு திட்டமிட்டுள்ளது.
ரேடியோ ஹரிவராசனம் என்ற பெயரில் இந்த ஆன்லைன் ரேடியோ இயங்கும். 24 மணி நேரமும் ஒலிபரப்பாகும் இந்த ரேடியோவை உலகம் முழுவதும் உள்ள பக்தர்கள் கேட்கலாம். தலைமை ஒலிபரப்பு நிலையம் சபரிமலையில் செயல்படும்.
இதில் சபரிமலை வழிபாடுகள், பக்தி பாடல்கள், கோயில் விழாக்களின் நேரடி நிகழ்ச்சிகள், சபரிமலை வரலாறு பற்றிய தொகுப்புகள், கோயில் பாரம்பரியம் தொடர்பான நேர்காணல், சொற்பொழிவுகள் இடம்பெறும். மண்டல சீசனுக்கு முன்னால் இது அமலுக்கு வரும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.