முதல்வர் பினராயி மகள் மீது வழக்கு; பதவி விலகுமாறு எதிர்க்கட்சிகள் போராட்டம்
முதல்வர் பினராயி மகள் மீது வழக்கு; பதவி விலகுமாறு எதிர்க்கட்சிகள் போராட்டம்
ADDED : ஏப் 05, 2025 01:29 AM

திருவனந்தபுரம்: கேரள முதல்வர் பினராயி விஜயனின் மகள் வீணா மீது லஞ்ச வழக்கு தொடரப்பட்டுள்ளதால், முதல்வர் பதவியிலிருந்து அவர் விலகும்படி எதிர்கட்சிகள் வலியுறுத்தி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டைச் சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது.
பினராயி விஜயனின் மகள் வீணா, 'எக்சாலஜிக் சொல்யூஷன்ஸ்' என்ற தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தை நடத்துகிறார்.
விசாரணை
இவர், 'கொச்சி மினரல் ரூட்டில் லிமிடெட்' என்ற தனியார் சுரங்க நிறுவனத்திடம் இருந்து, தன் நிறுவனத்துக்கு கடந்த 2017 முதல் 2020 வரை 2.73 கோடி ரூபாய் பெற்றுள்ளார். ஐ.டி., தொடர்பான எந்த சேவையும் வழங்காமலேயே, இந்த பணத்தை வீணா பெற்றது தெரிந்தது.
இதையடுத்து, மத்திய கம்பெனிகள் விவகாரங்கள் துறையின் கீழ் செயல்படும், எஸ்.எப்.ஐ.ஓ., எனப்படும் பெரு நிறுவனங்களின் பண மோசடியை விசாரிக்கும் புலனாய்வு அமைப்பினர், விசாரணை நடத்தினர். இறுதியாக, 160 பக்க குற்றப் பத்திரிகையைஅந்த அமைப்பினர் தயாரித்துள்ளனர்.
அதில், இரு நிறுவனங்களுக்கு இடையே கண் துடைப்புக்காக ஒப்பந்தம் போட்டு, எந்தவித சேவையும் வழங்காமலேயே 2.73 கோடி ரூபாயை வீணாவுக்கு சொந்தமான நிறுவனம் பெற்றதாக கூறப்பட்டுள்ளது.
முறைகேடு
மேலும் பினராயி விஜயனின் மகள் வீணா, கொச்சி மினரல் ரூட்டில் லிமிடெட் நிர்வாக இயக்குநர் சசிதரன் கர்த்தா மற்றும் 25 பேர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
வீணா நிறுவனத்தின் துணை நிறுவனமான 'எம்போவர் இந்தியா கேபிடல் இன்வெஸ்ட்மென்ட்ஸ் நிறுவனம்' உட்பட வேறு பல நிறுவனங்களும் அதில் பட்டியலிடப்பட்டுள்ளன.
துணை நிறுவனங்கள் வாயிலாக, முறைகேடாக வீணா பணத்தை பெற்றதாகவும் அதில் கூறப்பட்டுளளது.
இந்த குற்றப் பத்திரிகையை கொச்சியில் உள்ள பொருளாதார குற்றங்களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் எஸ்.எப்.ஐ.ஓ., புலனாய்வு அமைப்பினர் நேற்று தாக்கல் செய்தனர். இதையடுத்து, வீணா உட்பட 27 பேரும் விரைவில்விசாரணைக்கு அழைக்கப்படுவர்.
குற்றச்சாட்டு உறுதியானால், 2.73 கோடி ரூபாயை லஞ்சமாக பெற்றதற்காக, கம்பெனிகள் சட்டத்தின் படி, வீணாவுக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும், முறைகேடாக பெற்ற பணத்தைப் போல பல மடங்கு அபராதமும் விதிக்கப்படும்.
இந்நிலையில், வீணா மீது லஞ்ச வழக்கு இருப்பதால், முதல்வர் பதவியில் இருந்து பினராயி விஜயன் விலகும்படி காங்., மற்றும் பா.ஜ., கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.
மேலும், காங்., மற்றும் பா.ஜ., கட்சிகளின் தலைவர்கள், விரைவில் மாநிலம் தழுவிய போராட்டத்தை நடத்தப் போவதாகவும் தெரிவித்தனர்.
பதவி விலக வேண்டும்
பெரிய அளவில் ஊழல் நடந்துள்ளது. இதில் பாரபட்சமற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும். இதற்காக பினராயி விஜயன், முதல்வர் பதவியிலிருந்து விலக வேண்டும். பினராயி விஜயன் முதல்வர் பதவியிலிருந்து விலகும்வரை பா.ஜ., சார்பில் மாநிலம் முழுதும் போராட்டம் நடத்தப்படும்.
ராஜிவ் சந்திரசேகர்
முன்னாள் மத்திய அமைச்சர், பா.ஜ.,