பார்லியில் அமளி கூடாது; எதிர்க்கட்சிகளுக்கு மோடி அறிவுரை
பார்லியில் அமளி கூடாது; எதிர்க்கட்சிகளுக்கு மோடி அறிவுரை
ADDED : டிச 01, 2025 10:55 AM

புதுடில்லி: ''எதிர்க்கட்சிகள் தங்கள் அமளியை அவைக்கு வெளியே வைத்துக் கொள்ளட்டும். அவைக்கு உள்ளே அமளியில் ஈடுபடக் கூடாது'' என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இன்றைய பார்லி., குளிர் கால கூட்ட தொடர் துவங்கும் முன்னதாக பார்லி., வளாகத்தில் பிரதமர் மோடி நிருபர்களிடம் கூறியதாவது: இன்று நடக்கும் பார்லி., கூட்டம் மிக இந்தியா வளர்ச்சிக்கு உதவும் முக்கியத்துவம் வாய்ந்தது. வளர்ச்சியை நோக்கி இந்தியா சென்று கொண்டிருக்கிறது. பீஹாரில் ஜனநாயக குரல் தேர்தல் மூலம் எதிரொலித்தது. இந்த தோல்வியை மனதில் கொண்டு எதிர்க்கட்சிகள் அரசியல் செய்யக்கூடாது.
ஒத்துழைப்பு
தோல்வியால் ஏற்பட்ட விரக்தியில் இருந்து மீண்டு வந்து, தங்கள் ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும். தொடர் வெற்றியால் எங்களுக்கு அகங்காரம் இல்லை. இந்தியா எப்போது ஜனநாயகத்தை காக்கும் நாடாக விளங்குகிறது. பார்லிமென்டை கூச்சல், குழப்பம் ஏற்படுத்தும் இடமாக பயன்படுத்தக் கூடாது. குளிர்கால கூட்டத் தொடரை சுமுகமாக நடத்த ஒத்துழைக்க வேண்டும்.
வளர்ச்சியே முதன்மை
மக்கள் பிரச்னை குறித்து எதிர்க்கட்சிகள் பார்லிமென்டில் பேச வேண்டும். இளம் எம்பிக்கள், முதல் முறை எம்பிக்கள் பார்லிமென்டில் அதிக நேரம் பேச முன்னுரிமை அளிக்க வேண்டும். எதிர்க்கட்சிகள் தங்கள் அமளியை அவைக்கு வெளியே வைத்துக் கொள்ளட்டும். அவைக்கு உள்ளே அமளியில் ஈடுபடக் கூடாது. நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் புதிய நம்பிக்கை ஏற்பட்டு உள்ளது. நாட்டின் வளர்ச்சியே முதன்மையானது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

