டில்லியின் 113 நுழைவு வாயில்களிலும் சோதனைச்சாவடி அமைக்க உத்தரவு
டில்லியின் 113 நுழைவு வாயில்களிலும் சோதனைச்சாவடி அமைக்க உத்தரவு
ADDED : நவ 23, 2024 12:38 AM

புதுடில்லி: காற்று மாசு காரணமாக, டில்லிக்குள் லாரிகள் நுழைவதைத் தடுக்க, 113 நுழைவுவாயில்களிலும் சோதனைச்சாவடிகள் அமைக்க வேண்டும் என, டில்லி அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அண்டை மாநிலங்களான பஞ்சாப் மற்றும் ஹரியானாவில் பயிர்க்கழிவுகள் எரிக்கப்படுவதால், டில்லியில் கடுமையான காற்று மாசு ஏற்பட்டுள்ளது. கடந்த இரண்டு வாரங்களாக காற்றின் தரம் மோசம்அடைந்துள்ளது.
மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரிய தகவலின் படி டில்லியில் காற்றின் தரம் நேற்றும் மிக மோசமான நிலையை எட்டியது. ஆனந்த் விஹார், பாவனா, வாசிர்பூர் ஆகிய பகுதிகளில் காற்று தரக் குறியீடு 400க்கு மேல் உயர்ந்து அபாயகரமான அளவை எட்டியது.
காற்று மாசை தடுக்க டில்லி அரசு கட்டுமானப் பணிகளுக்கு தடை விதித்துள்ளது.
லாரிகள், வெளிமாநில பதிவெண் உடைய பெரிய வாகனங்களுக்கு கட்டுப்பாடு, அரசு அலுவலக நேரம் மாற்றியமைப்பு, பள்ளி, கல்லுாரிகளுக்கு ஆன்லைன் வகுப்புகள், தனியார் நிறுவன ஊழியர்களுக்கு வீட்டிலிருந்தே வேலை போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்த பிரமாண பத்திரத்தை டில்லி அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. இதை ஆய்வு செய்த நீதிபதிகள் அபய் எஸ் ஓகா மற்றும் அகஸ்டின் ஜார்ஜ் மாசில் ஆகியோர் அடங்கிய அமர்வு 'மற்ற மாநிலங்களில் இருந்து, டில்லிக்குள் நுழைவதற்கு, 113 வழித்தடங்கள் உள்ளன.
இவற்றில் சில வழித்தடங்களில் லாரிகள் அனுமதிக்கப்படுவதாக தகவல்கள் வருகின்றன.
'லாரிகளுக்கு எதற்காக அனுமதி அளிக்கப்படுகிறது என, டில்லி அரசு விளக்க வேண்டும். 113 வழித்தடங்கள் உள்ள நிலையில், 13 வழித்தடங்களில் மட்டும் போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர். மீதமுள்ள 100 வழித்தடங்கள் வாயிலாக லாரிகள் நுழைய முடியும். இதை தடுத்து நிறுத்த வேண்டும்' என்று கூறினர்.
இதைத் தொடர்ந்து, 113 வழித்தடங்களிலும் சோதனைச் சாவடிகள் அமைத்து, போலீசாரை நிறுத்தி லாரிகள் நுழைவதைத் தடுக்க வேண்டும் என, டில்லி அரசு மற்றும் டில்லி போலீசாருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
அவசர நிலையை அறிவியுங்கள்!
வட மாநிலங்களில் நிலவும் காற்று மாசு பிரச்னையை தேசிய அவசர நிலையாக அறிவிக்க வேண்டும். இந்த பிரச்னையால் குழந்தைகள், முதியோர் துாய்மையான காற்றை சுவாசிக்க முடியாமல் அவதிப்படுகின்றனர். அரசியலுக்காக ஒருவர் மீது ஒருவர் பழிபோடுவது சரியல்ல.
ராகுல்
லோக்சபா எதிர்க்கட்சி தலைவர், காங்கிரஸ்.