பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் சம்பவம்: குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது என்.ஐ.ஏ.,
பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் சம்பவம்: குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது என்.ஐ.ஏ.,
ADDED : டிச 16, 2025 12:21 AM

ஜம்மு: பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் சம்பவம் தொடர்பாக என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு அமைப்பு, ஜம்முவில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நேற்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. இதில் பாகிஸ்தானின் லஷ்கர் - இ - தொய்பா, அதன் துணை அமைப்பான 'தி ரெசிஸ்டென்ஸ் பிரன்ட்' மற்றும் அந்த அமைப்புக்கு உதவியவர்கள் என மொத்தம் எட்டு பேர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
ஜம்மு -- காஷ்மீரின் சுற்றுலா தலமான பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22ல் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், 26 சுற்றுலா பயணியர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு, நம் அண்டை நாடான பாகிஸ்தானைச் சேர்ந்த லஷ்கர் -- இ -- தொய்பா பயங்கரவாத அமைப்பின் துணை அமைப்பான, 'தி ரெசிஸ்டென்ஸ் பிரன்ட்' பொறுப்பேற்றது.
கடந்த ஜூலையில் பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் பஹல்காம் சம்பவத்தில் தொடர்புடைய மூன்று பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். அவர்களிடம் கைப்பற்றப்பட்ட ஆயுதங்களை ஆய்வு செய்தபோது, காஷ்மீரை சேர்ந்த நபர் பயங்கரவாதிகளுக்கு ஆயுதங்கள் சப்ளை செய்தது தெரியவந்தது.
இதையடுத்து குல்காமை சேர்ந்த கட்டாரியா, 26, என்பவரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில், உள்ளூர்வாசிகளான பஷீர் ஜோதர் மற்றும் பர்வேஸ் அகமது ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இச்சம்பவம் தொடர்பாக அனைத்து விசாரணைகளும் நிறைவடைந்த நிலையில், ஜம்முவில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் என்.ஐ.ஏ., அதிகாரிகள் நேற்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.
மொத்தம் 1,597 பக்கம் அடங்கிய குற்றப்பத்திரிகையில், பாகிஸ்தான் பயங்கரவாதி சஜித் ஜாட் என்பவரின் பெயரும் இணைக்கப்பட்டுள்ளது. இதுதவிர, பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட மூன்று பயங்கரவாதிகளான பைசல் ஜாட், ஹபீப் தாஹிர், ஹம்சா ஆப்கானி ஆகியோரின் பெயர்களும் சேர்க்கப்பட்டுள்ளன.
இதேபோல் லஷ்கர் - இ - தொய்பா பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு உதவிய உள்ளூர்வாசிகளான பஷீர் ஜோதர், பர்வேஸ் அகமது ஆகியோரின் பெயர்களும் இணைக்கப்பட்டுள்ளன.
இதுதவிர, இக்குற்றப்பத்திரிகையில் பாகிஸ்தானின் பங்கு, குற்றஞ்சாட்டப்பட்டவரின் செயல்பாடுகள், அதற்கான ஆதாரங்கள் உள்ளிட்டவையும் குறிப்பிடப்பட்டுள்ளன.

