பயங்கரவாதிகளுக்கு ரூ.14 கோடி நிதியளித்த பாகிஸ்தான்; புட்டு புட்டு வைத்த ராஜ்நாத் சிங்!
பயங்கரவாதிகளுக்கு ரூ.14 கோடி நிதியளித்த பாகிஸ்தான்; புட்டு புட்டு வைத்த ராஜ்நாத் சிங்!
ADDED : மே 16, 2025 01:26 PM

ஆமதாபாத்: ''கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் குடும்பத்தினருக்கு ரூ.14 கோடி பாகிஸ்தான் நிதி அளித்துள்ளது'' என பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
குஜராத் மாநிலம் புஜ் விமானப்படை தளத்தில் வீரர்கள் மத்தியில் ராஜ்நாத் சிங் பேசியதாவது: இந்தியா நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்ட பயங்கரவாதிகளின் குடும்பத்தினருக்கு பாகிஸ்தான் ரூ.14 கோடி நிதி அளித்துள்ளது. பயங்கரவாதி மசூத் அசாருக்கு பாகிஸ்தான் நிதி கொடுத்துள்ளது. இப்படி தொடர்ந்து பாகிஸ்தான் அரசு உதவி செய்து வருகிறது.
மறுபரிசீலனை
அங்குள்ள பயங்கரவாதிகளை முழுமையாக அழிக்கும் வரை இந்தியா ஓயாது. பாகிஸ்தானின் அணு ஆயுதங்கள் பயங்கரவாதிகள் கைகளில் சிக்கும் அபாயம் உள்ளது. சர்வதேச செலாவணி நிதியம் கொடுத்த நிதியை பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு வழங்கி உள்ளது. அப்படி நிதி கொடுப்பதை பரிசீலனை செய்து ரத்து செய்ய வேண்டும்.
ட்ரெய்லர் தான்
ராணுவ வீரர்களின் கண்காணிப்பின் கீழ் இந்திய எல்லைகள் பாதுகாப்பாக உள்ளன. ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை இன்னும் முடிவடையவில்லை. இன்னும் தொடர்கிறது. இதுவரை பார்த்தது ட்ரெய்லர் தான். இனி மேல் தான் படமே இருக்கிறது. நேரம் வரும்போது ஆபரேஷன் சிந்தூரின் முழு வடிவத்தை உலகம் பார்க்கும். சில ஆண்டுகளுக்கு முன்பு உலக நாடுகளிடம் இருந்து ஆயுதங்களை வாங்கினோம்.
நிரூபணம்
தற்போது நாமே உற்பத்தி செய்கிறோம். பாகிஸ்தான் மண்ணில் அமைந்திருந்த ஒன்பது பயங்கரவாத முகாம்களை நீங்கள் எவ்வாறு அழித்தீர்கள் என்பதை உலகம் ஆச்சரியத்துடன் பார்த்தது. இந்திய விமானப்படை தங்கள் வலிமையை மட்டுமல்ல, இப்போது இந்தியாவின் தொழில்நுட்பமும் மாறிவிட்டது என்பதை உலகிற்கு நிரூபித்தது. இவ்வாறு ராஜ்நாத் சிங் பேசினார்.