ADDED : பிப் 15, 2024 01:38 AM

ஜம்மு, காஷ்மீர் எல்லையில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் வீரர்கள், நம் எல்லை பாதுகாப்பு படையினரின் நிலைகள் மீது நேற்று துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
காஷ்மீர் மாநிலம் ஜம்மு அருகே மக்வாலில் இந்தியா - பாகிஸ்தான் சர்வதேச எல்லை உள்ளது. இதை, எல்லை பாதுகாப்பு படையினர் கண்காணிக்கின்றனர்.
இந்நிலையில், நேற்று பாகிஸ்தான் வீரர்கள் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மதிக்காமல் அத்துமீறி, இந்திய நிலைகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். அவர்களுக்கு நம் பாதுகாப்பு வீரர்கள் பதிலடி தந்தனர். நேற்று மாலை 5:50 மணிக்கு துவங்கிய இந்த தாக்குதல் 20 நிமிடங்கள் நீடித்தது.
இதில், நம் தரப்பில் யாருக்கும் உயிரிழப்போ, காயங்களோ ஏற்படவில்லை. இந்த திடீர் தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து, சர்வதேச எல்லையில் வீரர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு, மிகுந்த எச்சரிக்கை உடன் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.
நிலைமையை உயர் அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.

