/
செய்திகள்
/
இந்தியா
/
'பார்லி., - அரசு நிர்வாகத்தில் தலையிடுவதாக ஏற்கனவே எங்களை விமர்சிக்கின்றனர்' மே.வங்கத்தில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்த கோரிய மனு மீது உச்ச நீதிமன்ற நீதிபதி கருத்து
/
'பார்லி., - அரசு நிர்வாகத்தில் தலையிடுவதாக ஏற்கனவே எங்களை விமர்சிக்கின்றனர்' மே.வங்கத்தில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்த கோரிய மனு மீது உச்ச நீதிமன்ற நீதிபதி கருத்து
'பார்லி., - அரசு நிர்வாகத்தில் தலையிடுவதாக ஏற்கனவே எங்களை விமர்சிக்கின்றனர்' மே.வங்கத்தில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்த கோரிய மனு மீது உச்ச நீதிமன்ற நீதிபதி கருத்து
'பார்லி., - அரசு நிர்வாகத்தில் தலையிடுவதாக ஏற்கனவே எங்களை விமர்சிக்கின்றனர்' மே.வங்கத்தில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்த கோரிய மனு மீது உச்ச நீதிமன்ற நீதிபதி கருத்து
ADDED : ஏப் 22, 2025 06:56 AM

புதுடில்லி: மேற்கு வங்கத்தில் நடக்கும் வன்முறைக்காக அந்த மாநில அரசை கலைக்க உத்தரவிடக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், 'பார்லிமென்ட் மற்றும் அரசு நிர்வாகத்தில் நீதிமன்றம் தலையிடுவதாக ஏற்கனவே விமர்சனம் உள்ள நிலையில், இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது' என, கருத்து தெரிவித்தனர்.
மாநில சட்டசபையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பதில் கவர்னர் காலதாமதம் செய்வதாக தொடரப்பட்ட வழக்கில், மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்க கவர்னர்களுக்கும், ஜனாதிபதிக்கும் உச்ச நீதிமன்றம் காலக்கெடு விதித்தது.
இதை வன்மையாக கண்டித்த துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர், உச்ச நீதிமன்றம் சூப்பர் பார்லிமென்டாக செயல்படுவதாகவும், ஜனநாயக சக்திகள் மீது அணு ஏவுகணை வீசக்கூடாது என்றும் விமர்சித்தார்.
சர்ச்சை
'நீதிமன்றமே சட்டம் இயற்றும் என்றால் பார்லிமென்டை மூடிவிடலாம்' என, பா.ஜ., - எம்.பி., நிஷிகாந்த் துபே கருத்து தெரிவித்தார். இது சர்ச்சையாகி உள்ளது.
இந்நிலையில், ஓ.டி.டி., தளங்களில் ஆபாச படங்கள் வெளியாவதை தடுக்கவும் கோரிய வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது கருத்து தெரிவித்த நீதிபதி பி.ஆர்.கவாய் கூறுகையில், ''ஆபாச படங்களை கட்டுப்படுத்துவது யார்? மத்திய அரசு தான் ஒழுங்குமுறையை வகுக்க வேண்டும். ஏற்கனவே, பார்லிமென்ட் செயல்பாடு மற்றும் அரசு நிர்வாகத்தில், நீதித்துறை அளவுக்கு அதிகமாக தலையிடுவதாக விமர்சனங்கள் உள்ளன,'' என கருத்து தெரிவித்தார்.
இதையடுத்து, இந்த வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, மேற்கு வங்கத்தில் கடந்த சட்டசபை தேர்தலின்போது நடந்த வன்முறையை கட்டுப்படுத்த மாநில அரசு தவறி விட்டதால், அங்கு ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தக் கோரி, ஜெயின் என்பவர் தாக்கல் செய்த மனு, நீதிபதிகள் பி.ஆர்.கவாய், அகஸ்டின் ஜார்ஜ் மய்ஸ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது, சமீபத்தில் வக்ப் சட்டத்தை எதிர்த்து நடந்த போராட்டத்தின் போது மேற்கு வங்கத்தில் வன்முறை வெடித்ததால், அங்கு துணை ராணுவப்படையை பாதுகாப்புக்கு நிறுத்தக்கோரி, புதிய மனு தாக்கல் செய்துள்ளதாக மனுதாரர் தெரிவித்தார்.
குற்றச்சாட்டு
இதை விரைவாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
அப்போது கருத்து தெரிவித்த நீதிபதி பி.ஆர்.கவாய், ''ஏற்கனவே பார்லிமென்ட் மற்றும் அரசு நிர்வாகத்தில் தலையிடுவதாக எங்கள் மீது குற்றச்சாட்டு உள்ளது.
''இந்த நேரத்தில் மேற்கு வங்கம் தொடர்பாக ஜனாதிபதிக்கு நாங்கள் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என நினைக்கிறீர்களா?'' என, கேள்வி எழுப்பினார். பின், இந்த மனு மீதான விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.