விமான பாதுகாப்புக்கு குறைந்த நிதி; பார்லி., நிலைக்குழு அதிருப்தி
விமான பாதுகாப்புக்கு குறைந்த நிதி; பார்லி., நிலைக்குழு அதிருப்தி
ADDED : ஜூன் 21, 2025 04:12 AM

புதுடில்லி : நடப்பு நிதியாண்டில், விமான பாதுகாப்பு உட்கட்டமைப்புக்கு குறைந்த அளவே நிதி ஒதுக்கப்பட்டதற்கு, பார்லி., நிலைக்குழு அதிருப்தி தெரிவித்தது, தற்போது தெரிய வந்துள்ளது.
குஜராத்தின் ஆமதாபாதில், கடந்த 12ல், 'ஏர் இந்தியா' விமானம் விபத்துக்கு உள்ளானதில், ஒரேயொரு பயணி தவிர, குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி உட்பட 241 பேர் உயிரிழந்தனர்.
இது குறித்து, ஏ.ஏ.ஐ.பி., எனப்படும் விமான விபத்து புலனாய்வு பணியகம் விசாரித்து வருகிறது.
அதிருப்தி
இந்நிலையில், நடப்பு 2025 - 26ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டில், விமான பாதுகாப்பு உட்கட்டமைப்பு மற்றும் விபத்து விசாரணை திறன்களுக்கு, வெறும் 35 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கப்பட்டதற்கு, பார்லி., நிலைக்குழு அதிருப்தி தெரிவித்தது, தற்போது தெரிய வந்துள்ளது.
சுற்றுலா, போக்குவரத்து மற்றும் கலாசாரத் துறை தொடர்பான பார்லி., நிலைக்குழு, கடந்த மார்ச் 25ல், ராஜ்யசபாவில் அறிக்கை தாக்கல் செய்தது. அதன் விபரம்:
உலகளவில், மூன்றாவது பெரிய விமான சந்தையாக நம் நாடு உள்ளது. 2014ல், 74 ஆக இருந்த விமான நிலையங்களின் எண்ணிக்கை தற்போது 150 ஆக உயர்ந்துள்ளது. மேலும், விமான பயணியரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.
எனினும், விமான பாதுகாப்பு உட்கட்டமைப்பு மற்றும் விபத்து விசாரணை திறன்களுக்கு, 2025 - 26ம் நிதியாண்டில், வெறும் 35 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கப்பட்டு உள்ளது.
டி.ஜி.சி.ஏ., எனப்படும் சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகத்துக்கு, 30 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், விமான விபத்துகளை விசாரிக்கும் புலனாய்வு அமைப்பான ஏ.ஏ.ஐ.பி.,க்கு, 20 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கப்பட்டு உள்ளது.
மதிப்பாய்வு
பி.சி.ஏ.எஸ்., எனப்படும் சிவில் விமான பாதுகாப்பு பணியகத்துக்கு, 15 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது. விமான நிலையங்கள் மற்றும் பயணியர் பாதுகாப்பில், ஏ.ஏ.ஐ.பி., - பி.சி.ஏ.எஸ்., பங்கு அளப்பரியது. இந்த அமைப்புகளுக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டிருக்க வேண்டும்.
பாதுகாப்பு உட்கட்டமைப்பை வலுப்படுத்தவும், புலனாய்வு திறன்களை மேம்படுத்தவும் இந்த அமைப்புகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதி போதுமானதா என்பதை மதிப்பிடுவது அவசியம். மேலும், ஏ.ஏ.ஐ.பி., - பி.சி.ஏ.எஸ்., அமைப்புகளில் ஊழியர்களின் எண்ணிக்கையையும் மதிப்பாய்வு செய்ய வேண்டும்.
டி.ஜி.சி.ஏ.,வுக்கு அதிக நிதி ஒதுக்கப்படும் போது, ஏ.ஏ.ஐ.பி., - பி.சி.ஏ.எஸ்., அமைப்புகளுக்கு குறைந்த நிதி வழங்கப்படுவது ஏற்புடையதல்ல. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.