டில்லி நீதிபதிகளுக்கு கட்டாய பயிற்சி: சுப்ரீம் கோர்ட் அதிரடி
டில்லி நீதிபதிகளுக்கு கட்டாய பயிற்சி: சுப்ரீம் கோர்ட் அதிரடி
ADDED : அக் 02, 2025 12:28 AM

புதுடில்லி: மோசடி வழக்கு ஒன்றில் ஜாமின் வழங்கியதில் நிறைய குளறுபடிகள் இருப்பதாக கூறி, டில்லி நீதிபதிகள் இருவர் ஏழு நாட்கள் கட்டாய பயிற்சி பெற உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
டில்லியை சேர்ந்த சிக்ஷா ரத்தோர் மற்றும் அவரது கணவர் மீது, 1.9 கோடி ரூபாய் மோசடி செய்ததாக 'நெட்சிட்டி சிஸ்டம்ஸ்' என்ற நிறுவனம் புகார் அளித்தது. அந்த புகாரின் பேரில் அவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களுக்கு, டில்லி கூடுதல் முதன்மை பெருநகர நீதிமன்ற நீதிபதி, 2023ல் ஜாமின் வழங்கினார். அதை, அமர்வு நீதிமன்றம் மற்றும் டில்லி உயர் நீதிமன்றம் 2024ல் உறுதி செய்தது.
இதை எதிர்த்து, 'நெட்சிட்டி சிஸ்டம்ஸ்' நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டது. மனுவை விசாரித்த நீதிபதி அமனுல்லா, சிக்ஷா ரத்தோர் மற்றும் அவரது கணவரின் ஜாமினை ரத்து செய்தார். இரண்டு வாரங்களில் விசாரணை நீதிமன்றத்தில் சரணடைய உத்தரவிட்டார்.
நீதிபதி அமனுல்லா தன் உத்தரவில் கூறியதாவது:
விசாரணை முடிவுக்கு வரும் முன், குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கு பெருநகர நீதிபதி ஜாமின் வழங்கி உள்ளார். அதில் அமர்வு நீதிபதி தலையிடாமல் இருந்துள்ளார். இதை பார்த்த பின் எங்கள் கடமையை புறக்கணிக்க முடியாது. இந்த உத்தரவு வழங்கிய இரு நீதிபதிகளும், நீதித்துறை சிறப்பு பயிற்சியை ஏழு நாள் பெறுவது அவசியம். இதற்காக டில்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி உரிய ஏற்பாடுகள் செய்ய வேண்டும்.
இந்த வழக்கில் விசாரணை அதிகாரிகள், காவலில் எடுக்க வேண்டிய தேவையில்லை என கூறியுள்ளனர். டில்லி போலீஸ் கமிஷனர், அவர்களின் நடத்தை குறித்து நேரடியாக விசாரணை நடத்தி தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.