ADDED : ஜன 17, 2024 01:27 AM
பெங்களூரு : பி.எம்.டி.சி., பஸ்சில் அடையாள அட்டையை கேட்ட பெண் நடத்துனரைத் தாக்கி, முகத்தை பிறாண்டிய பெண் பயணி கைது செய்யப்பட்டார்.
பெங்களூரின், சிக்கபானவாராவில் வசிப்பவர் மோனிஷா, 29. இவர் இரண்டு நாட்களுக்கு முன்பு, பி.எம்.டி.சி., பஸ்சில் பயணம் செய்தார். இலவச டிக்கெட் பெற்றதற்கான அடையாள அட்டையை காண்பிக்கும்படி, நடத்துனர் சுகன்யா, 49, கேட்டார். மோனிஷா அடையாள அட்டையை காண்பிக்கவில்லை.
இதே காரணத்தால், இருவருக்கும் வாக்குவாதம் நடந்தது. அப்போது கோபமடைந்த மோனிஷா, நடத்துனர் சுகன்யாவை தாக்கி, விரல் நகங்களால் அவரது முகத்தை பிறாண்டி காயப்படுத்தினார். தகாத வார்த்தைகளால் திட்டினார்.
இதுகுறித்து, பாகல்குண்டே போலீஸ் நிலையத்தில், சுகன்யா புகார் அளித்தார். விசாரணை நடத்திய போலீசார், மோனிஷாவை நேற்று முன்தினம் கைது செய்தனர். பொங்கல் பண்டிகை காரணமாக, நீதிமன்றம் விடுமுறை என்பதால், நகரின் 31வது ஏ.சி.எம்.எம்., நீதிமன்ற நீதிபதி வீட்டில் அவரை ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.

