மருத்துவமனைக்கு வெளியே எலிகள் தொல்லையால் நோயாளிகள், உறவினர்கள் அவதி: எய்ம்ஸ் நடவடிக்கை
மருத்துவமனைக்கு வெளியே எலிகள் தொல்லையால் நோயாளிகள், உறவினர்கள் அவதி: எய்ம்ஸ் நடவடிக்கை
ADDED : ஜன 06, 2026 09:37 PM

புதுடில்லி:டில்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள், உறவினர்கள், குளிர், நச்சுக்காற்று, எலி தொல்லைகளால் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
புகழ்பெற்ற அரசு மருத்துவமனையான டில்லி எய்ம்ஸ், தினமும் ஆயிரக்கணக்கான நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கிறது. இருப்பினும், மருத்துவமனைக்கு வெளியே ஒவ்வொரு இரவும் ஒரு கொடூரமான யதார்த்தம் அரங்கேறுகிறது. மருத்துவமனைக்கு வெளியே உள்ள சிமெண்ட் தரையில், நோயாளிகளும் அவர்களது உதவியாளர்களும், தனியார் தங்கும் விடுதிகளில் தங்க பணமில்லாத காரணத்தாலும், அதிகாலை ஓபிடி வரிசையைத் தவறவிடக் கூடாது என்ற கட்டாயத்தாலும் நோயாளிகள் குடும்பத்தினர் வெட்டவெளியில் தங்கும் நிலை ஏற்படுகிறது. அப்போது, குளிரையும், நச்சுக்காற்றையும் சகித்துக்கொண்டு, எலிகளுடன் சேர்ந்து அமரவும், படுக்கவும், உறங்கவும் நிர்பந்தம் ஏற்படுகிறது.
இந்த நிலையை சமாளிக்க எய்ம்ஸ் நிர்வாகம் சில நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
அதன்படி, 'ஆஷ்ரே' இரவு காப்பகம் ஜனவரி முதல் சி.ஆர்.பி.எப் உதவியுடன் தொடங்கப்பட்டது. இங்கு 250 படுக்கைகள் உள்ளன.இங்கு இலவச உணவு மற்றும் போர்வைகள் வழங்கப்படுவதோடு, நோயாளிகளின் வரிசை இடத்தைப் பாதுகாக்கும் டோக்கன் முறையும் உள்ளது.
விஸ்ராம் சதன் எனப்படும் காப்பகம் தொடங்கப்பட்டுள்ளது. இங்கு 1,500 படுக்கைகளுடன் கூடிய இந்த காப்பகத்தை எய்ம்ஸ் இணையதளம் மூலம் முன்பதிவு செய்யலாம். இதற்கு மருத்துவரின் பரிந்துரை அவசியம்.
இரவில் சாலையில் தங்குபவர்களைக் கண்டறிந்து, மின்சாரப் பஸ்கள் மூலம் அவர்களைக் காப்பகங்களுக்கு அழைத்துச் செல்லும் பணியை எய்ம்ஸ் மேற்கொண்டு வருகிறது.
இருப்பினும், மக்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால் 'ஆஷ்ரே' போன்ற காப்பகங்கள் பெரும்பாலும் நிரம்பி வழிகின்றன. சில நோயாளிகள் காப்பகங்களில் இடம் கிடைக்க 1 முதல் 2 நாட்கள் காத்திருக்க வேண்டிய சூழல் இன்றும் நீடிக்கிறது.

