சைபர் மோசடியில் மக்கள் இழந்தது 2025ல் மட்டும் ரூ.20,000 கோடி
சைபர் மோசடியில் மக்கள் இழந்தது 2025ல் மட்டும் ரூ.20,000 கோடி
ADDED : ஜன 13, 2026 06:12 AM

புதுடில்லி: நாடு முழுதும் கடந்த ஆண்டு நடந்த சைபர் மோசடியில், 20,000 கோடி ரூபாயை மக்கள் இழந்துள்ளனர். டில்லிவாசிகள் மட்டும், 1,250 கோடி ரூபாயை பறிகொடுத்துள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
'டிஜிட்டல் அரெஸ்ட்' போன்ற சைபர் குற்றங்கள் நாளுக்குநாள் அதிகரித்து வருகின்றன. இதற்கு மூத்த குடிமக்கள் தான் முதல் இலக்காக உள்ளனர். 'மொபைல் போன்' அழைப்பு வாயிலாக இந்த மோசடிகள் அரங்கேறுகின்றன.
பெரும்பாலும் நிதி முறைகேடு, வரி ஏய்ப்பு போன்ற குற்றச்சாட்டுகளை சொல்லி, கைது செய்வதற்கான வாரன்ட் இருப்பதாக மிரட்டி பணம் பறிக்கின்றனர்.
சமீபத்தில் டில்லி கிரேட் டர் கைலாஷில் முதிய தம்பதியான டாக்டர்களை, டிஜிட்டல் அரெஸ்ட் முறையில் ஏமாற்றி 14.85 கோடி ரூபாயை மோசடியாளர்கள் பறித்துள்ளனர். இதனால் அவர்கள் தங்களின் வாழ்நாள் சேமிப்பை இழந்து தவிக்கின்றனர்.
இதுபோன்ற மோசடி கும்பல்களை தென் கிழக்கு ஆசிய நாடுகளான கம்போடியா, லாவோஸ், வியட்நாம் உள்ளிட்ட நாடுகளில் உள்ள சீனர்கள் இயக்குவதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து போலீசார் மேலும் கூறியதாவது: கடந்த 2024ல் டிஜிட்டல் அரெஸ்ட் மூலம் டில்லியில் மட்டும் 1,100 கோடி ரூபாய் பறிக்கப்பட்ட நிலையில், 2025ல் இந்த தொகை, 1,250 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இவற்றில், மீட்கப்பட்ட தொகையின் விகிதமும் 2024-ல் 10 சதவீதத்தில் இருந்து, 2025-ல் 24 சதவீதமாக உயர்ந்துள்ளது.
நாடு முழுதும் கடந்த ஆண்டு நடந்த சைபர் மோசடிகளில் மட்டும் பொதுமக்கள், 20,000 கோடி ரூபாயை இழந்துள்ளனர். பணத்தை இழந் தோர், 24 மணி நேரத்திற்குள் போலீசில் புகார் அளித்தால், இழந்த பணத்தை மீட்க வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

