காசோலை மோசடி வழக்குகளில் வாட்ஸாப், இ-மெயில் மூலம் சம்மன் அனுப்ப அனுமதி
காசோலை மோசடி வழக்குகளில் வாட்ஸாப், இ-மெயில் மூலம் சம்மன் அனுப்ப அனுமதி
ADDED : ஜன 07, 2026 12:52 AM

டேராடூன்: காசோலை மோசடி வழக்குகளில் குற்றஞ்சாட்டப்படுபவர்களுக்கு, 'வாட்ஸாப், இ -மெயில்' மூலம் சம்மன் அனுப்ப, உத்தரகண்ட் உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
உச்ச நீதிமன்றம், கடந்த ஆண்டு செப்டம்பரில், காசோலை மோசடி தொடர்பான வழக்குகளை விசாரிக்க, விரிவான வழிகாட்டுதல்களை பிறப்பித்தது. இதை அனைத்து நீதிமன்றங்களும் செ யல்படுத்தும்படி அறிவுறுத்தியிருந்தது .
அதை பின்பற்றி, உத்தரகண்ட் உயர் நீதிமன்ற பதிவாளர் அம்மாநிலத்தில் உள்ள மாவட்ட, அமர்வு மற்றும் குற்றவியல் நீதிமன்றங்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
காசோலை மோசடி வழக்குகளில் சம்மனை, வழக்கமான தபால் முறையில் மட்டும் அனுப்பாமல், 'இ-மெயில், மொபைல் போன், வாட்ஸாப்' மூலமும் அனுப்பலாம். புகார் அளிக்கும் போதே, குற்றஞ்சாட்டப்பட்டவரின் இ--மெயில், வாட்ஸாப் விபரங்களை புகார்தாரர் அளிக்க வேண்டும். இவற்றின் உண்மைத்தன்மைக்கு உறுதிமொழி பத்திரமும் இணைக்க வேண்டும். தவறான தகவல் வழங்கினால் அதற்கு தண்டனை உண்டு.
குற்றஞ்சாட்டப்பட்டவர், காசோலை தொகையை ஆன்லைனில் செலுத்தி, வழக்கை சமரச அடிப்படையில் விரைவாக முடிக்கும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சம்மனில் ஆன்லைனில் பணம் செலுத்துவதற்கான இணைப்பு குறிப்பிடப்பட்டிருக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

