ADDED : ஜூலை 17, 2025 01:08 AM

எம்.பி.பி.எஸ்., படிப்புக்கான கவுன்சிலிங் நாடு முழுதும் துவங்கவுள்ள நிலையில், 'நீட்' மறுதேர்வு கோரி, உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான,'நீட்' நுழைவுத்தேர்வு மே 4ல் நடந்தது. ஜூன் 14ல் முடிவுகள் வெளியானது. விரைவில் கவுன்சிலிங் துவங்க உள்ளது.
இந்நிலையில், மத்திய பிரதேசத்தின் இந்துார் உள்ளிட்ட சில நகரங்களில், நீட் தேர்வு நடந்த போது, மின்சாரம் தடைபட்டதால், தேர்வு எழுத முடியாமல் மாணவர்கள் சிரமத்தை சந்தித்ததாக புகார் தெரிவித்தனர்.
அவர்கள் மறுதேர்வு நடத்த கோரி மத்திய பிரதேச உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். அந்த மனுக்களை விசாரித்த நீதிபதி, நீட் மறுதேர்வு நடத்த உத்தரவிட்டார்.
தனி நீதிபதியின் இந்த உத்தரவை இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு ரத்து செய்தது. இதையடுத்து, பாதிக்கப்பட்ட மாணவர்கள் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.
உச்ச நீதிமன்ற நீதிபதி சூரியகாந்த் அமர்வில், இந்த மனுவை விரைவாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ள கோரி, மாணவர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கோரிக்கை வைத்தார். இதையடுத்து, 'அடுத்த வாரம் இந்த வழக்கு விசாரணைக்கு பட்டியலிடப்படும்' என, நீதிபதி தெரிவித்தார்
-டில்லி சிறப்பு நிருபர்-.