ADDED : மார் 15, 2024 01:10 AM
புதுடில்லி: பெட்ரோல், டீசல் விலையை லிட்டருக்கு தலா 2 ரூபாய் குறைத்து மத்திய அரசு நேற்று அறிவித்தது.
பெட்ரோல், டீசல் விலை கடந்த இரண்டு ஆண்டுகளாக உயர்த்தப்படாமல் இருந்தது.
லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ள நிலையில், பெட்ரோல், டீசல் விலையை லிட்டருக்கு தலா 2 ரூபாய் குறைத்து மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி நேற்று அறிவிப்பு வெளியிட்டார்.
பெட்ரோல், டீசல் மீதான மதிப்புக்கூட்டு வரி மற்றும் இதர வரிகள் மாநிலத்துக்கு மாநிலம் வேறுபடுவதால், ஒவ்வொரு மாநிலத்திலும் விலை மாறுபடும்.
டில்லியில், டீசல் லிட்டருக்கு 89.62 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இது தற்போது, லிட்டருக்கு 87.62 ரூபாயாக குறைந்துஉள்ளது.
டில்லியில், லிட்டர் 96.72 ரூபாய்க்கு விற்கப்படும் பெட்ரோல், 94.72 ரூபாயாக குறைந்துள்ளது.
சென்னையை பொறுத்தவரை பெட்ரோல் விலை லிட்டருக்கு 1.88 ரூபாய் மட்டுமே குறைக்கப்பட்டுள்ளது.
இந்த விலை குறைப்பு இன்று காலை 6:00 மணி முதல் அமலுக்கு வந்தது. வீட்டு உபயோகத்துக்கான சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை 100 ரூபாய் குறைத்து மத்திய அரசு சமீபத்தில் அறிவிப்பு வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

