'டிஜிட்டல்' அடையாள எண் பயன்படுத்தி விவசாயிகளுக்கு யூரியா வழங்க திட்டம்
'டிஜிட்டல்' அடையாள எண் பயன்படுத்தி விவசாயிகளுக்கு யூரியா வழங்க திட்டம்
ADDED : ஜன 24, 2026 05:44 AM

புதுடில்லி: யூரியா உர விற்பனையில் தட்டுப்பாடுகளை தடுக்கவும், உர மானியம், உரிய விவசாயிகளுக்கு செல்வதை உறுதி செய்யவும் விவசாயிகளின் 'டிஜிட்டல்' அடையாள எண்ணை பயன்படுத்த திட்டமிடப்பட்டுஉள்ளது.
விவசாயிகளின் சாகுபடி செலவை குறைக்கும் வகையில், மத்திய அரசு மானிய விலையில் உரங்களை வழங்குகிறது. இதற்காக ஆண்டு தோறும் பட்ஜெட்டில், 1.50 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் நிதி ஒதுக்கப்படுகிறது.
நடப்பு நிதியாண்டில், உர மானிய செலவு பட்ஜெட் ஒதுக்கீட்டை தாண்டி 2 லட்சம் கோடி ரூபாயை எட்டும் நிலைக்கு சென்றுள்ளது.
குறிப்பாக யூரியாவுக்கு அதிக மானியம் வழங்கப்படுகிறது. இதனால், விவசாயிகளுக்கு இது மலிவு விலையில் கிடைக்கிறது.
இதன் காரணமாக, விவசாயிகள் தேவைக்கு அதிகமாக யூரியா பயன்படுத்துவதாக புகார் உள்ளது. மேலும் சில விற்பனையாளர்கள் தொழில்துறை பயன்பாட்டுக்கு திருப்பிவிடுதல் போன்றவை நடக்கின்றன.
எனவே யூரியா விற்ப னையை ஒழுங்குப்படுத்த, விவசாயிகளின் டிஜிட்டல் அடையாள எண் மற்றும் 'அக்ரி ஸ்டேக்' இணைய தளத்தை பயன்படுத்த மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது.
இதுகுறித்து வேளாண் அமைச்சக அதிகாரிகள் கூறியதாவது:
தேசிய வேளாண் திட்டத்தின் கீழ், நாட்டில் உள்ள விவசாயிகளுக்கு ஆதார் எண்ணை போலவே தனித்துவ டிஜிட்டல் அடையாள எண் வழங்கும் திட்டம், 2021ல் மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது.
இத்திட்டத்தின் கீழ், பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த கோடிக்கணக்கான விவசாயிகள் இணைந்து, டிஜிட்டல் அடையாள எண் பெற்றுள்ளனர்.
அதில், விவசாயியின் பெயர், வயது, முகவரி, நில அளவு, பாசன வசதி ஆகிய விபரங்கள் அடங்கி இருக்கும்.
இவை 'அக்ரி ஸ்டேக்' என்ற விவசாயம் தொடர்பான அனைத்து டிஜிட்டல் தரவுகளையும் இணைக்கும் தேசிய தளத்தில் பராமரிக்கப்படுகிறது.
இந்நிலையில், நாட்டில் அடையாள எண் பெற்ற விவசாயிகள் அதிகம் உள்ள ஏழு மாவட்டங்கள் கண்டறியப்பட்டுஉள்ளன.
அங்கு சோதனை ஓட்டமாக, விவசாயிகளின் டிஜிட்டல் அடையாள எண்ணை பெற்று, யூரியா விற்பனை செய்ய உள்ளனர்.
தேவைக்கு அதிகமாக யூரியா வாங்கினால், அந்த விவசாயிக்கு அறிவுரை வழங்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

