சிறுபிள்ளைத்தனமாக நடந்து கொள்கிறார்; ராகுலை சாடிய மோடி
சிறுபிள்ளைத்தனமாக நடந்து கொள்கிறார்; ராகுலை சாடிய மோடி
ADDED : ஆக 05, 2025 12:28 PM

புதுடில்லி: சிறுபிள்ளைத்தனமாக நடந்து கொள்கிறார் என தேசிய ஜனநாயக கூட்டணி பார்லி., குழு கூட்டத்தில் பிரதமர் மோடி ராகுலை கடுமையாக சாடினார்.
டில்லியில் தே.ஜ., கூட்டணி பார்லி., குழு கூட்டம் நடந்தது. கூட்டத்தில் பங்கேற்ற, பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பாகிஸ்தானில் பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராக இந்தியா மேற்கொண்டுள்ள ராணுவ நடவடிக்கையான 'ஆப்பரேஷன் சிந்தூர்' குறித்து பிரதமர் மோடி விளக்கம் அளித்தார்.
அப்போது பிரதமர் மோடி பேசியதாவது: ஆப்பரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து எதிர்க்கட்சிகள் கேள்விகளை எழுப்புவதன் மூலம் தங்களைத் தாங்களே காயப்படுத்திக் கொள்கிறார்கள். இதுபோன்ற விவாதங்களை அவர்கள் மேலும் கோர வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். அவற்றை நாங்கள் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்வோம்.
முழு நாடும் அவர்களின் நடத்தையைப் பார்த்துக் கொண்டிருக்கிறது. நாம் ஏன் அவர்களைத் தடுக்க வேண்டும்? அவர் (ராகுல்) எதையாவது சொல்லிக்கொண்டே இருப்பார். அடிக்கடி சிறுபிள்ளைத்தனமாக நடந்து கொள்கிறார்.
உச்ச நீதிமன்றம் கூட அவரைக் கண்டித்துள்ளது. அவர்களின் குழந்தைத்தனத்தை முழு நாடும் பார்த்துவிட்டது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
தீர்மானம் நிறைவேற்றம்
இந்த கூட்டத்தில் ஆப்பரேஷன் சிந்தூர் குறித்தும் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தீர்மானத்தில் கூறியிருப்பதாவது:
ஆப்பரேஷன் சிந்தூர் நடவடிக்கை மற்றும் ஆப்பரேஷன் மகாதேவ் நடவடிக்கையின் போது விதிவிலக்கான வீரத்தை வெளிப்படுத்திய நமது ஆயுதப்படைகளின் துணிச்சலுக்கும் உறுதியான அர்ப்பணிப்பும் ஆகும்.
பஹல்காமில் நடந்த கொடூரமான பயங்கரவாத தாக்குதலில் உயிர் இழந்தவர்களுக்கு நாங்கள் மனதார மரியாதை செலுத்துகிறோம், எங்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

