UPDATED : ஆக 21, 2024 11:57 AM
ADDED : ஆக 21, 2024 11:30 AM

புதுடில்லி: போலந்தில் இருந்து உக்ரைனுக்கு பிரதமர் மோடி ரயிலில் மூலம் செல்ல உள்ளார்.
போலந்து பயணம்
பிரதமர் மோடி அரசு முறை பயணமாக இன்று ( ஆக.,21) காலை போலந்து கிளம்பி சென்றார். அங்கு அந்நாட்டு அதிபர், பிரதமர் ஆகியோரை சந்திக்கும் மோடி இந்திய வம்சாவளியினர் மத்தியில் உரையாற்ற உள்ளார்.
இந்த பயணம் தொடர்பாக ‛ எக்ஸ் ' சமூக வலைதளத்தில் பிரதமர் மோடி வெளியிட்டு உள்ளதாவது: வார்சா கிளம்பி செல்கிறேன். இரு நாடுகளுக்கு இடையே தூதரக உறவு ஏற்பட்டு 70 ஆண்டுகள் நிறைவு பெற்றதை கொண்டாடும் நேரத்தில் இந்த பயணம் சிறப்பு வாய்ந்ததாக அமைகிறது. போலந்துடனான ஆழமான நட்புறவை இந்தியா கொண்டாடி வருகிறது. ஜனநாயகம் மற்றும் பன்முகத்தன்மை மேலும் வலுப்பெறும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
7 மணி நேரம்
போலந்து பயணத்தை முடித்து கொண்டு பிரதமர் மோடி உக்ரைன் செல்ல உள்ளார். கடந்த 30 ஆண்டுகளில் இந்திய பிரதமர் ஒருவர் அந்நாட்டிற்கு செல்வது இது முதல் முறையாகும். போலந்தில் இருந்து உக்ரைனுக்கு பிரதமர் மோடி ரயில் மூலம் பயணம் மேற்கொள்கிறார். சுமார் 20 மணி நேர பயணத்திற்காக பாதுகாப்பு மற்றும் அதிநவீன வசதிகளுடன் கூடிய ரயில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. சுமார் 7 மணி நேரம் மட்டும் உக்ரைனில் இருக்கும் மோடி, அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கியை சந்திக்க உள்ளார்.
தலைவர்கள் பயணம்
உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வரும் நிலையில், பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. பல நாட்டு தலைவர்கள் ரயில் மூலமே உக்ரைன் வருகின்றனர். அவர்களில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான், ஜெர்மன் சான்சிலர் ஓலப் ஸ்கால்ஜ் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, பிரிட்டன் முன்னாள் பிரதமர் ரிஷி சுனக், இத்தாலி பிரதமர் ஜியார்ஜியா மெலோனி, ஜப்பான் பிரதமர் பிமியோ கிஷிடோ ஆகியோர் ரயில் மூலம் உக்ரைன் பயணித்து உள்ளனர். உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியும் வெளிநாடுகளுக்கு ரயில் பயணத்தையே நம்பி உள்ளார்.
ரயலின் சிறப்பம்சங்கள்
ரயிலில் பயணம் மேற்கொள்வோரை கவரும் வண்ணம் உட்புறம் வடிவமைக்கப்பட்டு உள்ளது. தலைவர்கள் தங்க அறைகள் பல வேலைப்பாடுகளுடன் மரத்தில் செய்யப்பட்டு உள்ளது. முக்கிய ஆலோசனை நடத்த விசாலமான மேஜைகள், சொகுசாக சோபா மற்றும் டிவி பொருத்தப்பட்டு உள்ளது. சுகமாக தூங்குவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
முதலில் சுற்றுலா பயணிகளை கவருவதற்காக இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டன. பிறகு ரஷ்யா தாக்குதல் காரணமாக, உலக தலைவர்களை பாதுகாப்பாக அழைத்து வருவதற்கு இந்த ரயில் பயன்படுத்தப்படுகிறது.
நம்பிக்கை
உக்ரைன் பயணம் தொடர்பாக பிரதமர் மோடி கூறியதாவது: ஜெலன்ஸ்கியின் அழைப்பின் பேரில் உக்ரைன் செல்ல உள்ளேன். இரு நாடுகளுக்கு இடையிலான நட்புறவை வலுப்படுத்த இது உதவும். உக்ரைன் மீதான தாக்குதலுக்கு அமைதியான முறையில் தீர்வு ஏற்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்படும். நம்முடைய நண்பர் மற்றும் கூட்டாளி என்ற முறையில், அந்த பிராந்தியத்தில் விரைவில் அமைதியும் ஸ்திரத்தன்மையும் ஏற்படும் என்ற நம்பிக்கை உள்ளது. இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.