UPDATED : ஜன 11, 2026 12:22 AM
ADDED : ஜன 10, 2026 10:10 PM

ஆமதாபாத்: பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஜனவரி 10) குஜராத்தின் புகழ்பெற்ற சோம்நாத் கோயிலுக்கு வருகை தந்து வழிபாடு நடத்தினார்.
குஜராத் மாநிலம் கிர் சோம்நாத் மாவட்டத்தில் உள்ள சோம்நாத் கோயில் வரலாற்று புகழ்பெற்றது. கி.பி. 1026-ல் சோம்நாத் கோயில் மீது நடத்தப்பட்ட முதல் தாக்குதலின் 1000-வது ஆண்டை நினைவு கூறும் வகையில் 'சோம்நாத் சுவாபிமான் பர்வ்' என்னும் விழா ஜனவரி 8 முதல் 11 வரை கொண்டாடப்படுகிறது. பிரதமர் மோடியின் வருகை,கோயிலில் நடைபெற்று வரும் 'சோம்நாத் சுவாபிமான் பர்வ்' கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாகும்.கோயிலுக்கு வந்த மோடியை, குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் மற்றும் பிற முக்கிய பிரமுகர்கள் வரவேற்றனர்.
சுதந்திரத்திற்குப் பிறகு சர்தார் வல்லபாய் படேலின் முயற்சியால் கோயில் சீரமைக்கப்பட்டு, 1951-ல் திறக்கப்பட்டதன் 75-வது ஆண்டையும் இது குறிக்கிறது.
இன்று இரவு 8 மணியளவில் பிரதமர் மோடி,கோயிலில் நடைபெற்ற 'ஓங்கார மந்திர' ஜபத்தில் பங்கேற்றார். இது 72 மணி நேர தொடர் ஜபத்தின் ஒரு பகுதியாகும்.
ட்ரோன் காட்சி:
வழிபாட்டிற்குப் பிறகு, கோயிலின் வரலாறு மற்றும் கலாச்சாரத்தை விளக்கும் பிரம்மாண்டமான ட்ரோன் சாகசக் காட்சியை பிரதமர் பார்வையிட்டார். இதில் சுமார் 3,000 ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டன.
இன்று (ஜனவரி 11) பிரதமர் மேற்கொள்ள உள்ள முக்கிய நிகழ்வுகள்:
சவுர்ய யாத்திரையில் கோயிலைப் பாதுகாக்க உயிர்நீத்த வீரர்களைக் கௌரவிக்கும் வகையில் 108 குதிரைகளுடன் நடைபெறும் ஊர்வலத்திற்கு பிரதமர் மோடி தலைமை தாங்குகிறார்.
அதை தொடர்ந்து சோம்நாத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகிறார். பின்னர்,பின்னர் ராஜ்கோட் சென்று 'வைப்ரண்ட் குஜராத்' மண்டல மாநாட்டைத் தொடங்கி வைக்கிறார்.

