பி.எம்., ஸ்ரீ திட்டம் கேரள முதல்வர் பினராயி விஜயன் 'பல்டி'
பி.எம்., ஸ்ரீ திட்டம் கேரள முதல்வர் பினராயி விஜயன் 'பல்டி'
ADDED : அக் 30, 2025 03:19 AM

திருவனந்தபுரம் : ''கேரளாவில், 'பி.எம்., ஸ்ரீ' எனப்படும், 'பிரதமரின் எழுச்சிமிகு இந்தியாவுக்கான பள்ளிகள்' திட்டம் தொடர்பாக ஆய்வு செய்ய கல்வி அமைச்சர் சிவன்குட்டி தலைமையில் ஏழு பேர் அடங்கிய குழுவை மாநில அரசு அமைத்ததுள்ளது. இக்குழு இறுதி அறிக்கை சமர்ப்பிக்கும் வரை, இத்திட்டம் நடைமுறைக்கு வராது,'' என, மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
கேரளாவில், மார்க்.கம்யூ., கட்சியைச் சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் இடது ஜனநாயக முன்னணி கூட்டணி ஆட்சி நடக்கிறது. இக்கூட்டணியில் அங்கம் வகிக்கும் இ.கம்யூ., கட்சிக்கு, 17 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர். இவர்களில் நான்கு பேர், அமைச்சர்களாக பதவி வகிக்கின்றனர்.
தேசிய கல்விக் கொள்கையின் கீழ் பி.எம்., ஸ்ரீ திட்டம் செயல்படுத்தப்படுகிறது. ஒவ்வொரு தொகுதியிலும் இரண்டு பள்ளிகளை தேர்வு செய்து, கல்வியின் தரம் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி, முன்மாதிரி பள்ளிகளாக மாற்றுவதே இத்திட்டத்தின் நோக்கம்.
இத்திட்டத்தை அமல்படுத்த கேரள அரசு எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், சமீபத்தில் இத்திட்டத்துக்கு ஒப்புதல் அளித்தது. தொடர்ந்து, மாநில அமைச்சரவையின் ஒப்புதல் இன்றி, பி.எம்., ஸ்ரீ திட்டத்தில் இணைவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில், கேரள கல்வித்துறை கையெழுத்திட்டது.
கேரளாவுக்கு கிடைக்க வேண்டிய நிதியை பெறவே பி.எம்., ஸ்ரீ திட்டத்தில் இணைந்ததாக கல்வி அமைச்சர் சிவன்குட்டி விளக்கம் அளித்தார். எனினும் இதை கூட்டணியில் அங்கம் வகிக்கும் இ.கம்யூ., ஏற்கவில்லை. இதனால் அக்கூட்டணிக்குள் கடும் எதிர்ப்பு எழுந்தது.
இந்நிலையில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் கேரள அமைச்சரவை கூட்டம் நேற்று நடைபெற்றது. அதன் பின் முதல்வர் பினராயி விஜயன் கூறியதாவது:
பி.எம்., ஸ்ரீ திட்டத்தில், கேரள அரசு இணைவது பற்றி கல்வி அமைச்சர் சிவன்குட்டி தலைமையில் அமைச்சர்கள் ராஜன், ராஜீவ், ரோஷி அகஸ்டின், பிரசாத், கிருஷ்ணகுட்டி, ஏ.கே.சசிதரன் ஆகிய ஏழு பேர் அடங்கிய குழு நியமிக்க அமைச்சவை ஒப்புதல் அளித்துள்ளது.
இக்குழு ஆய்வு நடத்தி இறுதி அறிக்கையை சமர்ப்பிக்கும் வரை, இத்திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கைகள் நிறுத்தி வைக்கப்படும். இதுபற்றி கடிதம் வாயிலாக, மத்திய அரசுக்கு தெரியப்படுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

