மல்யுத்த அமைப்பின் முன்னாள் தலைவர் பிரிஜ் பூஷண் மீதான போக்சோ வழக்கு முடித்து வைப்பு
மல்யுத்த அமைப்பின் முன்னாள் தலைவர் பிரிஜ் பூஷண் மீதான போக்சோ வழக்கு முடித்து வைப்பு
ADDED : மே 26, 2025 09:40 PM

புதுடில்லி: மல்யுத்த கூட்டமைப்பு முன்னாள் தலைவர் பிரிஜ் பூஷண் சிங் மீதான பாலியல் துன்புறுத்தல் வழக்கை இன்று டில்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றம் முடித்து வைத்தது.
2023 ஆம் ஆண்டில், பிரிஜ் பூஷன் சிங் மீது பல பெண் மல்யுத்த வீரர்கள் பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுப்பினர். அவருக்கு எதிராக விசாரணை கோரி வாரக்கணக்கில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
6 மல்யுத்த வீராங்கனைகள் பிரிஜ் பூஷன் மீது பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் ஒடுக்குமுறை குற்றச்சாட்டுகளை அளித்தனர்.
பின்னர் நீதிமன்றம் மைனர் புகார்தாரருக்கும் அவரது தந்தைக்கும் நோட்டீஸ் அனுப்பி அவர்களின் பதிலைக் கோரியது. ஆகஸ்ட் 2023 இல், மைனர் புகார்தாரரும் அவரது தந்தையும் நோட்டீஸுக்கு பதிலளிக்கும் விதமாக நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார்கள்.
அதைத் தொடர்ந்து, நீதிமன்றம் பல விளக்கங்களைக் கோரியது. முந்தைய விசாரணையின் போது, புகார்தாரரை மீண்டும் அதன் முன் ஆஜராகுமாறு நீதிமன்றம் கேட்டுக் கொண்டது. பாதிக்கப்பட்டவர்கள் காவல்துறை விசாரணையில் திருப்தி தெரிவித்தனர்.
ஜூன் 15, 2023 அன்று வழக்கில் காவல்துறையின் இறுதி அறிக்கையை ஏற்றுக்கொண்டு, இன்று உத்தரவு அளிக்கப்பட்டது. இந்நிலையில் போக்சோ வழக்கு முடித்து வைக்கப்பட்டது.
தீர்ப்பு குறித்து பிரிஜ் பூஷன் சிங் கூறியதாவது:
பொய்யான மற்றும் ஜோடிக்கப்பட்ட வழக்கில் நாங்கள் நீதித்துறையில் வெற்றியைப் பெற்றுள்ளோம். ஒவ்வொரு ஆதாரமற்ற குற்றச்சாட்டும் இப்போது நீதியின் கூண்டில் முறியடிக்கப்படுகிறது. இது உண்மையின் வெற்றி, இந்த வெற்றி தொடரும்.
இவ்வாறு பிரிஜ் பூஷன் சிங் கூறினார்.

