போதை பொருள் கடத்துவோரின் ரூ.73 கோடி சொத்து பறிமுதல்
போதை பொருள் கடத்துவோரின் ரூ.73 கோடி சொத்து பறிமுதல்
UPDATED : செப் 13, 2026 08:26 PM
ADDED : செப் 13, 2026 07:13 PM
ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில், போதைப் பொருள் கடத்தல்காரர்களுக்கு சொந்தமான, 73.64 கோடி ரூபாய் மதிப்புள்ள அசையும் மற்றும் அசையா சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன.
ராஜஸ்தானில் போலீசார், போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதன்படி, கடந்த ஜன., முதல் தற்போது வரை, கடத்தல்காரர்களின், 73.64 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை போலீசார் முடக்கி உள்ளனர்.
இது குறித்து, போதை பொருள் தடுப்பு பிரிவு போலீஸ் ஐ.ஜி., விகாஸ் குமார் நேற்று அளித்த பேட்டி:
போதைப் பொருள் கடத்தல்காரர்களுக்கு எதிராக, 63 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவற்றில், 38 வழக்குகளில் சொத்துகளை முடக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி, கடத்தல்காரர்களின் வீடுகள், கடைகள், விவசாய நிலங்கள், வாகனங்கள் என, அசையும் மற்றும் அசையா சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
சித்தோர்கர் மாவட்டத்தின் கங்ரார் என்ற பகுதியைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ராகுல் பஞ்சாராவுக்கு சொந்தமான, 18.79 கோடி ரூபாய் சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. பரான் மாவட்டத்தில், 18.48 கோடி சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன.
ஜாலாவாரில், ஒன்பது குற்றவாளிகளுக்கு சொந்தமான, 12.65 கோடி ரூபாய் சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ள. பிரதாப்காரில் கோழிப் பண்ணை, வாகனங்கள் என, 8.24 கோடி ரூபாய் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு மாநிலம் முழுதும், மொத்தம், 73.64 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.
