காலவரையற்ற உண்ணாவிரதம் தொடங்கிய பிரசாந்த் கிஷோர்!
காலவரையற்ற உண்ணாவிரதம் தொடங்கிய பிரசாந்த் கிஷோர்!
ADDED : ஜன 02, 2025 07:49 PM

பாட்னா: பீஹார் அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய தேர்வை ரத்து செய்யக்கோரி, தேர்தல் வியூக நிபுணரும், ஜன் சுராஜ் கட்சி நிறுவனருமான பிரசாந்த் கிஷோர் சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தைதுவக்கி உள்ளார்.
பீஹார் அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் , அரசுப் பணிகளுக்கு ஆட்களை தேர்வு செய்ய டிச.,13ல் மாநிலம் முழுவதும் தேர்வு நடந்தது. இதில் விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை. வினாத்தாள் கசிந்தது என தேர்வர்கள் குற்றம்சாட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். ஆனால், இந்த குற்றச்சாட்டை மாநில அரசு மறுத்தது.
தேர்வர்கள் கூறியபடி, இந்தத்தேர்வை ரத்து செய்து புதிதாக தேர்வு நடத்த வேண்டும் எனக்கூறி கடந்த 3 நாட்களுக்கு முன்னர் நிதிஷ்குமார் அரசுக்கு 48 மணி நேரம் பிரசாந்த் கிஷோர் கெடு விதித்து இருந்தார். ஆனால் இதற்கு அரசு செவி சாய்க்கவில்லை.
இந்நிலையில், பாட்னாவில் உள்ள காந்தி மைதானத்தில் பிரசாந்த் கிஷோர், சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தை துவக்கினார்.
அப்போது அவர் கூறியதாவது: டிச.,13ல் நடந்த தேர்வை ரத்து செய்து, புதிதாக தேர்வு நடத்த வேண்டும் என்பது எங்களது ஆரம்ப கட்ட கோரிக்கை. தேர்வு மூலம் நிரப்ப வேண்டிய தேர்வை, விற்பனை செய்துள்ளதாக கேள்விப்பட்டேன். அத்தகைய ஊழல் அதிகாரிகள் கண்டுபிடிக்கப்பட்டு நீதியின் முன்னர் நிறுத்தப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.