'வி.பி., ஜி ராம் ஜி' மசோதாவுக்கு ஜனாதிபதி முர்மு ஒப்புதல்
'வி.பி., ஜி ராம் ஜி' மசோதாவுக்கு ஜனாதிபதி முர்மு ஒப்புதல்
ADDED : டிச 22, 2025 12:06 AM

புதுடில்லி: மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி சட்டத்திற்கு மாற்றாக கொண்டு வரப்பட்டுள்ள, 'விக்சித் பாரத் ஜி ராம் ஜி' மசோதாவுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார்.
நாட்டின் கிராமப் பகுதிகளில் வறுமையை ஒழிக்கவும், வேலைவாய்ப்பு வழங்கும் வகையிலும், தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் 2005ல் சோதனை முயற்சியாக அமல்படுத்தப்பட்டது.
பின்னர் 2008ல் நாடு முழுதும் விரிவுபடுத்தப்பட்ட இந்த திட்டம் மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டம் என மாற்றப்பட்டது. இதன்படி ஆண்டுக்கு 100 நாட்கள் வேலை வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் புதிய ஊரக வேலை உறுதி திட்டத்தில், 125 நாட்கள் வேலை வழங்கும் வகையில் மாற்றி அமைக்கப்பட்டது. மேலும், மத்திய மற்றும் மாநில அரசுகள் 60:40 என்ற விகிதத்தில் நிதி பகிரும் வகையில் இந்த மசோதாவில் மாற்றம் செய்யப்பட்டது.
இந்த திட்டத்தை வளர்ந்த பாரதம் என்ற பொருள்படும், 'விக்சித் பாரத் ஊரக வாழ்வாதாரம் மற்றும் வேலைவாய்ப்பு உறுதி சட்டம்' என பெயர் மாற்றப்பட்டது.
'விக்சித் பாரத் கியாரன்டி பார் ரோஜ்கர் அண்டு அஜீவிகா மிஷன் - கிராமின்' என்ற சட்டத்தின் பெயர் 'வி.பி., ஜி ராம் ஜி' என்று சுருக்கமாக அழைக்கப்படுகிறது. லோக்சபா மற்றும் ராஜ்யசபாவில் எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புக்கிடையே இந்த மசோதா சமீபத்தில் நிறைவேற்றப்பட்டது.
இதையடுத்து ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் 'வி.பி., ஜி ராம் ஜி' மசோதாவுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு நேற்று ஒப்புதல் அளித்தார்.

