இந்தியாவிற்கு மிகப்பெரிய சொத்து: பிரதமர் மோடிக்கு சசி தரூர் பாராட்டு
இந்தியாவிற்கு மிகப்பெரிய சொத்து: பிரதமர் மோடிக்கு சசி தரூர் பாராட்டு
ADDED : ஜூன் 23, 2025 11:22 AM

புதுடில்லி: ''பிரதமர் நரேந்திர மோடியின் ஆற்றல், சுறுசுறுப்பு உள்ளிட்டவை உலக அரங்கில் இந்தியாவிற்கு ஒரு முக்கிய சொத்தாக உள்ளது'' என காங்கிரஸ் எம்.பி., சசி தரூர் பாராட்டி உள்ளார்.
காங்கிரஸ் மூத்த தலைவரும், எம்.பி.யுமான சசி தரூர் சமீப காலமாக பிரதமர் மோடியையும், மத்திய அரசையும் பாராட்டி பேசி வருகிறார். இதற்கு காங்கிரஸ் கட்சியில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
அக்கட்சி தலைவர்கள் சிலர், சசி தரூருக்கு கண்டனம் தெரிவித்தாலும், விமர்சனம் செய்தாலும் அதனை சசிதரூர் கண்டுகொள்ளவில்லை. ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை வெளிநாடுகளில் எடுத்துரைத்து விட்டு, சமீபத்தில் நாடு திரும்பிய காங்கிரஸ் எம்.பி. சசி தரூர், பிரதமர் நரேந்திர மோடியை பாராட்டி உள்ளார்.
அவர் கூறியதாக வெளியான செய்தியில் கூறியிருப்பதாவது: பிரதமர் நரேந்திர மோடியின் ஆற்றல், சுறுசுறுப்பு உள்ளிட்டவை உலக அரங்கில் இந்தியாவிற்கு ஒரு முக்கிய சொத்தாக உள்ளது. ஆனால் அதற்கு அதிக ஆதரவு தேவை. இந்த முயற்சி உலக அரங்கில் இந்தியாவின் ஒற்றுமையைக் காட்டுகிறது.
நாடு தொடர்ந்து பாடுபடுவதால், தொழில்நுட்பம், வர்த்தகம் மற்றும் பாரம்பரியம் ஆகிய மூன்றில் இந்தியாவின் செயல்பாடுகள் உலக அளவில் சிறந்ததாக வேண்டும். ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை ஒரு சட்டபூர்வமான தற்காப்புப் பயிற்சி.
தொடர்ச்சியான எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கு அவசியமானது என்பதை நாங்கள் வெளிநாடுகளிடம் விளக்கினோம். லஷ்கர்-இ-தொய்பா மற்றும் ஜெய்ஷ்-இ-முகமது போன்ற பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராக தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.