கோ கோ முதல் உலகக்கோப்பையை வென்ற இந்திய ஆடவர் மற்றும் மகளிர் அணிகள்; பிரதமர் வாழ்த்து
கோ கோ முதல் உலகக்கோப்பையை வென்ற இந்திய ஆடவர் மற்றும் மகளிர் அணிகள்; பிரதமர் வாழ்த்து
ADDED : ஜன 19, 2025 10:20 PM

புதுடில்லி: கோ கோ முதல் உலகக்கோப்பையை வென்ற இந்திய அணிகளுக்கு பிரதமர் மோடி வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
மகளிருக்கான கோ கோ உலகக்கோப்பை போட்டி முதல்முறையாக நடத்தப்பட்டது. டில்லியில் உள்ள இந்திரா காந்தி உள்விளையாட்டு அரங்கில் நடந்தது. குரூப் ஸ்டேஜ் ஆட்டங்களில் தென்கொரியா, ஈரான் மற்றும் மலேசியா அணிகளை தோற்கடித்த இந்திய அணி காலிறுதியில் வங்கதேசத்தை வீழ்த்தியது. அதன்பிறகு, தென்னாப்ரிக்காவை அரையிறுதியில் வீழ்த்தி, இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
இன்று நடந்த இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் நேபாளம் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ஆரம்ப முதலே இந்திய வீராங்கனைகள் ஆட்டத்தில் அனல் பறக்க விட்டனர். இதனால், இந்திய அணிக்கு புள்ளிகளுக்கு புள்ளிகள் கிடைத்தது. இறுதியில், 78-40 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றி பெற்று, முதல்முறையாக மகுடத்தை சூடியது.
சாம்பியன் பட்டத்தை வென்ற மகளிர் அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் விடுத்துள்ள பதிவில், 'அசாத்திய திறமை, உறுதி மற்றும் குழுவாக செயல்பட்டு இந்த வரலாற்று வெற்றியைப் பதிவு செய்த இந்திய மகளிர் அணிக்கு வாழ்த்துகள். இந்தியாவின் பழமையான பாரம்பரிய விளையாட்டை, இந்த வெற்றி வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது.நாட்டில் உள்ள கணக்கிட முடியாத இளம் விளையாட்டு வீரர்களுக்கு இது உந்துதலாக இருக்கும்', இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அதேபோல, ஆண்களுக்கான முதல் கோ கோ உலகக்கோப்பை தொடரிலும் இந்திய அணி, நேபாளத்தை 54-36 என்ற கணக்கில் வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.

