பீஹாரில் மீண்டும் தேஜ கூட்டணி ஆட்சி அமையும்: பிரதமர் மோடி நம்பிக்கை
பீஹாரில் மீண்டும் தேஜ கூட்டணி ஆட்சி அமையும்: பிரதமர் மோடி நம்பிக்கை
UPDATED : நவ 07, 2025 04:51 PM
ADDED : நவ 07, 2025 04:50 PM

பாட்னா: பீஹாரில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமையும் என்பதை, சாதனை படைத்த ஓட்டுப்பதிவு எடுத்துரைக்கிறது என பிரதமர் மோடி தெரிவித்து உள்ளார்.
பீஹாரில் உள்ள அவுரங்காபாத் தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி பேசியதாவது: பீஹாரில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு மீண்டும் அமையும் என்பதை, வழக்கத்தை விட சாதனை படைத்த ஓட்டுப்பதிவு எடுத்துரைக்கிறது. எதிர்க்கட்சிகளின் பொய்களை மக்கள் நிராகரித்துள்ளனர். பீஹாரில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகமான ஓட்டுக்கள் பதிவாகி உள்ளது.
முதல் கட்ட தேர்தலில் கிட்டத்தட்ட 65 சதவீத ஓட்டுப்பதிவாகி உள்ளது. பீஹாரில் காட்டாட்சி ராஜ்ஜியத்தை மக்கள் கொண்டு வர விரும்பவில்லை. காங்கிரஸ் தலைவர்கள் ஆர்ஜேடியின் தேர்தல் வாக்குறுதிகள் பற்றி ஒருபோதும் பேசுவது இல்லை. அந்த வாக்குறுதிகள் பொய்யானது. என் மீதும், முதல்வர் நிதிஷ் குமாரின் சாதனைகள் மீதும் மக்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர்.
மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ஆட்சியில் இருந்த போது, முதல்வர் நிதிஷ் குமார் சுமூகமாக செயல்பட அனுமதிக்கவில்லை. ஓய்வுபெற்ற பாதுகாப்பு வீரர்களின் கணக்குகளில் ரூ.1 லட்சம் கோடியை செலுத்தினோம். பீஹார் மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவது பற்றி காங்கிரஸ், ஆர்ஜேடி யோசிக்க முடியாது.
விவசாயிகளின் வங்கி கணக்குகளுக்கு நாங்கள் பணம் வரவு வைத்தோம். அரசாங்கம் அதைத் திரும்பப் பெறும் என்று ஆர்ஜேடி பொய்களைப் பரப்பியது. ஆர்ஜேடி கட்சியின் தலைவர்கள் பீஹாரை இருளில் ஆழ்த்தினர். 35-40 ஆண்டுகளில் வெல்லாத இடங்களை ஆர்ஜேடி காங்கிரசுக்கு வழங்கியது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

