மும்பை - ஆமதாபாத் புல்லட் ரயில்: பிரதமர் மோடி நேரில் ஆய்வு
மும்பை - ஆமதாபாத் புல்லட் ரயில்: பிரதமர் மோடி நேரில் ஆய்வு
ADDED : நவ 16, 2025 11:47 PM

புதுடில்லி: மும்பை - ஆமதாபாத் புல்லட் ரயில் திட்டப் பணிகள் தொடர்பான அனுபவங்களை ஆவணப்படுத்துமாறு, அதன் இன்ஜினியர்களை பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக் கொண்டுள்ளார்.
நாட்டின் முதல் புல்லட் ரயில் சேவை திட்டம், குஜராத் மாநிலம் ஆமதாபாதில் இருந்து மஹாராஷ்டிரா மாநிலம் மும்பை வரை துவங்கப் படவுள்ளது.
இதற்காக 508 கி.மீ., தொலைவுக்கு புல்லட் ரயில் இயங்குவதற்கான தண்டவாளங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. ஆமதாபாத், ஆனந்த், வதோதரா, பருச், சூரத், பிலிமோரா, வாபி, பொய்சார், விரார், தானே மற்றும் மும்பை என முக்கிய நகரங்கள் வழியாக இந்த புல்லட் ரயில் இயக்கப்படவுள்ளது.
இந்நிலையில், சூரத்தில் பணிகளை மேற்கொண்டு வரும் புல்லட் ரயில் இன்ஜினியர்களுடன், பிரதமர் மோடி நேற்று கலந்துரையாடினார். அப்போது அவர்களுக்கு ஏற்பட்ட அனுபவங் களையும் கேட்டறிந்தார்.
இதைத் தொடர்ந்து அவர் பேசியதாவது:
மும்பை - ஆமதாபாத் இடையிலான புல்லட் ரயில் சேவை திட்டம் தொடர்பான அனுபவங்களை, இன்ஜினியர்கள் ஆவணப்படுத்தி வைக்க வேண்டும். எதிர்காலத்தில் இது போன்ற திட்டங்களை செயல்படுத்துவதற்கு, அந்த அனுபவம் உதவியாக இருக்கும்.
நம் நாடு, தொடர்ந்து சோதனை நடத்துவதிலேயே இருக்கக் கூடாது. பணிகளில் கிடைத்த அனுபவங்களை புதிய திட்டங்களில் பிரதிபலிக்க வைக்க வேண்டும்.
அனுபவங்களை ஆவணப்படுத்துவதன் மூலம், அடுத்து வரும் இளம் தலைமுறையினர் தேச கட்டுமானப் பணிகளில் சிறப்பான பங்களிப்பை தர முடியும். அர்ப்பணிப்பு உணர்வுடன் வாழ வேண்டும். இந்த உலகை விட்டு நீங்கும்போது இந்த நாட்டுக்காக ஏதேனும் மதிப்பான பணிகளை விட்டுச் சென்று இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.

