பிரியங்கா கணவரின் சொத்து கணக்கு போலியானது: பா.ஜ., விமர்சனம்
பிரியங்கா கணவரின் சொத்து கணக்கு போலியானது: பா.ஜ., விமர்சனம்
ADDED : அக் 25, 2024 06:33 AM

புதுடில்லி : கேரளாவின் வயநாடு லோக்சபா தொகுதியில் போட்டியிடும் காங்., பொது செயலர் பிரியங்கா, நேற்று முன்தினம் வேட்புமனு தாக்கல் செய்தார்.
தன் தனிப்பட்ட சொத்து விபரங்களுடன், கணவர் ராபர்ட் வாத்ராவின் சொத்து கணக்கையும் தாக்கல் செய்துள்ளார். பிரியங்காவிடம், ஹிமாச்சலில் உள்ள 5.63 கோடி ரூபாய் மதிப்பிலான பங்களா உட்பட 12 கோடி ரூபாய் சொத்து இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
ஹிமாச்சலில் வெளியாட்கள் சொத்துக்கள் வாங்குவதற்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் சோனியா குடும்பத்தினருக்காக சமரசம் செய்யப்பட்டுள்ளதாக பா.ஜ., குற்றஞ்சாட்டி உள்ளது.
தன் கணவர் ராபர்ட் வாத்ராவிடம், 37.9 கோடி ரூபாய் அசையும் சொத்துக்களும், 27.64 கோடி ரூபாய்க்கு அசையா சொத்துக்களும் இருப்பதாக பிரியங்கா குறிப்பிட்டுள்ளார்.
ஆனால், நில ஊழல் உட்பட பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய ராபர்ட் வாத்ரா, 75 கோடி ரூபாய் அளவுக்கு வரி செலுத்த வேண்டி உள்ளதாக வருமான வரித்துறையினர் தெரிவித்துள்ளதாக பா.ஜ., மூத்த தலைவர் கவுரவ் பாட்டியா குற்றஞ்சாட்டி உள்ளார். பிரியங்கா வெளியிட்டுள்ளது, அவரது குடும்பத்தினர் சம்பாதித்த ஊழல் சொத்துக்களின் ஒப்புதல் வாக்குமூலம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு காங்., தரப்பில் பதில் அளிக்கப்படாத நிலையில், ராபர்ட் வாத்ரா பதில் அளித்துள்ளார். அதில், 'எப்போதெல்லாம் உண்மையான பிரச்னைகளில் இருந்து மக்களை திசை திருப்ப பா.ஜ., முயற்சிக்கிறதோ அப்போதெல்லாம் என் பெயர் அடிபடும். மக்களுக்கு உண்மை தெரியும். எந்த விசாரணை அமைப்பையும் எதிர்கொள்ள நான் தயார்' என, குறிப்பிட்டுள்ளார்.