மாணவிகள் பாலியல் ரீதியில் துன்புறுத்தல் வழக்கில் இருந்து பேராசிரியர் விடுவிப்பு
மாணவிகள் பாலியல் ரீதியில் துன்புறுத்தல் வழக்கில் இருந்து பேராசிரியர் விடுவிப்பு
ADDED : செப் 03, 2025 01:11 AM
மூணாறு:தேர்வு எழுதிய மாணவிகளை பாலியல் ரீதியில் துன்புறுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் பேராசிரியரை தொடுபுழா கூடுதல் செஷன்ஸ் கோர்ட் விடுவித்து உத்தரவிட்டது.
மூணாறு சொக்கநாடு எஸ்டேட், சவுத் டிவிஷனைச் சேர்ந்தவர் ஆனந்த் விஸ்வநாதன். மூணாறு அரசு கல்லூரியில் பேராசிரியராகவும், பொருளாதாரத்துறை தலைவராகவும் இருந்தார். 2014 ஆகஸ்ட் முதல் செப்.,5 வரை எம்.ஏ., பொருளாதாரம் இரண்டாம் செமஸ்டர் தேர்வு நடந்தது.
அப்போது தேர்வு எழுதிய ஐந்து மாணவிகளை ஆனந்த் விஸ்வநாதன் பாலியல் ரீதியில் துன்புறுத்தியதாக கல்வித்துறை அமைச்சர், மகளிர் ஆணையம் ஆகியோரிடம் புகார் அளிக்கப்பட்டது. மூணாறு போலீசார் விசாரித்து ஆனந்த்விஸ்வநாதன் மீது நான்கு வழக்குகள் பதிவு செய்து கைது செய்தனர்.
இவ்வழக்கு தேவிகுளம் செஷன்ஸ் கோர்ட்டில் நடந்த நிலையில் இரு வழக்குகளில் இருந்து ஆனந்த் விஸ்வநாதனை விடுவித்த நீதிமன்றம் இரண்டு வழக்குகளில் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டது. இதனிடையே ஆனந்த் விஸ்வநாதன் பணியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
மேல்முறையீடு: தேவிகுளம் நீதிமன்றம் உத்தரவுக்கு எதிராக ஆனந்த் விஸ்வநாதன் தொடுபுழா கூடுதல் செஷன்ஸ் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார்.
மாணவிகள் புகார் குறித்து பல்கலை விசாரணை ஆணையம் நடத்திய விசாரணையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாணவர் அமைப்பை சேர்ந்த மாணவிகள் தேர்வில் காப்பி அடித்ததை பேராசிரியர் கண்டு பிடித்ததால் அவர் மீது பொய் புகார் அளிக்கப்பட்டதும், அதற்கான ஆலோசனை மூணாறில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் நடந்ததாகவும் தெரிய வந்தது.
வழக்கை விசாரித்த கூடுதல் செஷன்ஸ் கோர்ட் அரசியல் சதி மூலம் தொடரப்பட்ட வழக்கு எனவும், போலீசாருக்கு எதிராகவும் கடுமையாக விமர்சித்துடன் ஆனந்த்விஸ்வநாதனை வழக்கில் இருந்து விடுவித்து உத்தர விட்டது.