‛‛அட போங்கப்பா, நீங்களும் உங்க சபையும்...'': கனத்த மனதுடன் வெளியேறிய ராஜ்யசபா அவைத் தலைவர்
‛‛அட போங்கப்பா, நீங்களும் உங்க சபையும்...'': கனத்த மனதுடன் வெளியேறிய ராஜ்யசபா அவைத் தலைவர்
UPDATED : ஆக 08, 2024 12:58 PM
ADDED : ஆக 08, 2024 12:47 PM

புதுடில்லி: எதிர்க்கட்சியினரின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து ராஜ்யசபா அவைத்தலைவர் ஜக்தீப் தங்கர் அவையில் இருந்து வெளியேறினார்.
ராஜ்யசபா இன்று ( ஆக.,08) கூடியதும், ஒலிம்பிக் மல்யுத்தத்தில் இருந்து வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்ட விவகாரத்தை எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே எழுப்பினார். இதன் பின்னணியில் யார் உள்ளார்கள் என கேள்வி கேட்டார். அதற்கு, ஜக்தீப் தங்கர் அனுமதி தரவில்லை.
அதே நேரத்தில் திரிணமுல் காங்கிரஸ் கட்சியின் டெப்ரிக் ஓ பிரையன் எழுந்து இன்னும் சில பிரச்னைகளை எழுப்பினார். இதற்கும் அனுமதி வழங்கப்படவில்லை.
அப்போது டெப்ரிக் ஓ பிரையனை எச்சரித்து ஜக்தீப் தங்கர் கூறுகையில், ‛‛ நீங்கள் அவைத் தலைவரை நோக்கி சத்தம் போடுகிறீர்கள். அவையில் உங்கள் நடவடிக்கை மோசமாக உள்ளது. உங்கள் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவிக்கிறேன். அடுத்த முறை வாசல் கதவை காட்டுகிறேன் '' என்றார். எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வெளிநடப்பு செய்தனர்.
எதிர்க்கட்சியினரின் நடவடிக்கைக்கு அதிருப்தி தெரிவித்து ஜக்தீப் தங்கர் ‛‛ சில நேரங்களில் நான் இங்கு அமர முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது. அவையை விட்டு கனத்த மனதுடன் வெளியேறுகிறேன்'' எனக்கூறி ஜக்தீப் தங்கர், அவையில் இருந்து வெளியேறினார்.
இதனையடுத்து அவை துணைத்தலைவர் ஹரிவன்ஷ் சிங் ராஜ்யசபாவை நடத்தினார்.