போலி விசா தயாரித்து கொடுத்த பஞ்சாப் வாலிபர் டில்லியில் கைது
போலி விசா தயாரித்து கொடுத்த பஞ்சாப் வாலிபர் டில்லியில் கைது
ADDED : பிப் 10, 2024 12:01 AM
புதுடில்லி:போலி விசா தயாரித்துக் கொடுத்த பஞ்சாப் வாலிபர் டில்லி விமான நிலையத்தில் பிடிபட்டார்.
பஞ்சாப் மாநிலம் பதேகர் சாஹிப்பை சேர்ந்தவர் முகேஷ்,34. இவர், செஹஜ்பிரீத் சிங் என்பவருக்கு போலி விசா தயாரித்துக் கொடுத்து கடந்த ஜூலை மாதம் தாய்லாந்துக்கு அனுப்பி வைத்தார்.
இதற்காக, அவரிடம் இருந்து ஒரு லட்சம் ரூபாய் கட்டணமாக வாங்கியிருந்தார்.
ஆனால், தாய்லாந்தில் போலி விசா என்பதைக் கண்டுபிடித்த அந்நாட்டு குடியுரிமை அதிகாரிகள், செஹஜ்பிரீத் சிங்கை, இந்தியாவுக்கு திருப்பி அனுப்பினர்.
இதுகுறித்து, நம் நாட்டு குடியுரிமை அதிகாரிகளிடம் சிங் அளித்த வாக்குமூலத்தில் கூறியுள்ளதாவது:
பணம் சம்பாதிக்க வெளிநாடு செல்ல விரும்பினேன். கடந்த 2022ம் ஆண்டு சமூக வலைதளத்தில் அறிமுகம் ஆன முகேஷ் என்ற ஏஜென்ட் அதற்கு ஏற்பாடு செய்து, ஒரு லட்சம் ரூபாய் வாங்கிக் கொண்டார்.
ஆனால், அவர் கொடுத்தது போலி விசா என்பது நான் தாய்லாந்தில் பிடிபட்டபோதுதான் தெரிந்தது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இதையடுத்து, முகேஷை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில், டில்லி விமான நிலையத்தில் நேற்று முகேஷ் பிடிபட்டார்.
அவரிடம் தீவிர விசாரணைக்கு பின் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.