"ராகுலின் பாரத் ஒற்றுமை நியாய யாத்திரை மார்ச் 16ம் தேதி நிறைவடையும்": காங்., தகவல்
"ராகுலின் பாரத் ஒற்றுமை நியாய யாத்திரை மார்ச் 16ம் தேதி நிறைவடையும்": காங்., தகவல்
ADDED : மார் 13, 2024 10:23 AM

புதுடில்லி: 'ராகுலின் பாரத் ஒற்றுமை நியாய யாத்திரை வரும் மார்ச் 16ம் தேதி நிறைவடையும்' என காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெயராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் எம்.பி., ராகுல் மணிப்பூர் முதல் மஹாராஷ்டிரா மாநிலம் மும்பை வரை பாரத் ஒற்றுமை நியாய யாத்திரையை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் செய்தியாளர்கள் சந்திப்பில் ஜெயராம் ரமேஷ் கூறியதாவது: குடியுரிமை திருத்தச் சட்டம் ஒரு சர்ச்சைக்குரியது. ஏனெனில் குடியுரிமை ஒரு போதும் மதத்தின் அடிப்படையில் இல்லை. இது அரசியல் அமைப்பிற்கு எதிரானது.
அவர்கள் (பா.ஜ.,) பார்லிமென்டை பயன்படுத்தி சட்டத்தை இயற்றுகின்றனர். 2019ம் ஆண்டு கொண்டு வந்த குடியுரிமை சட்டத்தில், விதிகளை வெளியிட நான்கு ஆண்டுகள் மற்றும் மூன்று மாதங்கள் ஆனது ஏன்?. மும்பையில் உள்ள தாதர் நகரில் வரும் மார்ச் 16ம் தேதி மாலை ராகுலின் பாரத் ஒற்றுமை நியாய யாத்திரை நிறைவடையும். அங்கு மார்ச் 17ம் தேதி காங்கிரஸ் கட்சி சார்பில் பேரணி ஒன்று நடக்க உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

