வெளிநாட்டில் ராகுலின் ‛டர்பன் ' பேச்சால் பூமராங்!
வெளிநாட்டில் ராகுலின் ‛டர்பன் ' பேச்சால் பூமராங்!
UPDATED : செப் 11, 2024 11:59 PM
ADDED : செப் 11, 2024 11:57 PM

புதுடில்லி : அமெரிக்காவில் சீக்கியர்கள் குறித்து காங்., மூத்த தலைவரும், லோக்சபா எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் தெரிவித்த சர்ச்சை கருத்துக்கு, காலிஸ்தான் பயங்கரவாதி குர்பத்வந்த் சிங் பன்னுான் ஆதரவு தெரிவித்துள்ளது, நம் நாட்டில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. ராகுலின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து, டில்லியில் உள்ள அவரது தாய் சோனியா வீட்டெதிரே, சீக்கிய அமைப்பினர் சிலரும், பா.ஜ.,வின் சீக்கிய பிரிவினரும் போராட்டம் நடத்தினர். பல முனைகளில் இருந்தும் எதிர்ப்பு எழுந்துள்ளதால், காங்., தலைவர்கள் 'கப்சிப்' ஆகியுள்ளனர்.
அமெரிக்காவுக்கு மூன்று நாட்கள் சுற்றுப்பயணமாக, லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் சென்றுள்ளார். சமீபத்தில், ஜார்ஜ் டவுன் பல்கலையில் மாணவர்களுடன் அவர் கலந்துரையாடினார்.
அப்போது ராகுல் பேசியதாவது:
இந்தியாவில் சீக்கியர்கள் இனி தலைப்பாகை அணிய முடியுமா, 'கடா' எனப்படும் கைகளில் காப்பு வளையம் அணிய முடியுமா, குருத்வாராவுக்கு செல்ல முடியுமா என்பதற்கான சண்டை நடக்கிறது. இது, அனைத்து மதங்களிலும் நடக்கிறது.
கொந்தளிப்பு
ஆர்.எஸ்.எஸ்., அமைப்பு, சில மதங்கள், மொழிகள், சமூகங்களை, மற்றவர்களை விட தாழ்வாகப் பார்க்கிறது. இந்தியாவில் இதற்குத் தான் சண்டை நடக்கிறது; அரசியலுக்காக அல்ல.
இவ்வாறு அவர் பேசினார்.
ராகுலின் இந்த பேச்சுக்கு, பா.ஜ.,வினர் உட்பட பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
ராகுலின் கருத்துக்கு, அமெரிக்காவில் இருந்து இயங்கும், காலிஸ்தான் ஆதரவு இயக்கமான, 'சீக்கியர்களுக்கான நீதி' என்ற அமைப்பின் தலைவரும், பயங்கரவாதியுமான குர்பத்வந்த் சிங் பன்னுான் ஆதரவு தெரிவித்தார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், 'இந்தியாவில் சீக்கியர்களுக்கு இருக்கும் அச்சுறுத்தல்கள் குறித்து ராகுல் தைரியமாக பேசியுள்ளார். 1947 முதல் சீக்கியர்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளை அவர் குறிப்பிட்டுள்ளார். இது, பஞ்சாபை காலிஸ்தான் நாடாக நிறுவுவதற்கான, எங்களது நிலைப்பாட்டை உறுதிப்படுத்துகிறது' என குறிப்பிடப்பட்டிருந்தது.
இவ்விவகாரம் நம் நாட்டில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. டில்லியின் ஜன்பத் பகுதியில் உள்ள ராகுல் மற்றும் அவரது தாயும், பார்லி., - காங்., குழு தலைவருமான சோனியா வீட்டெதிரே, சீக்கிய அமைப்பினரும், பா.ஜ.,வின் சீக்கிய பிரிவினரும் நேற்று ராகுலுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
டில்லியின் விக்யான் பவனில் இருந்து, ஜன்பத் பகுதியில் உள்ள ராகுலின் வீட்டை நோக்கி, பா.ஜ.,வின் சீக்கிய அமைப்பைச் சேர்ந்த பெண்கள் உள்ளிட்ட நுாற்றுக்கணக்கானோர் பேரணியாக சென்றனர்.
'சீக்கியர்களை அவமானப்படுத்தியதற்காக ராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும்' என, அவர்கள் கோஷம் எழுப்பினர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் அப்பகுதியில் பதற்றம் நிலவியது.
போராட்டத்தில் பங்கேற்ற சீக்கியர்கள் கூறுகையில், 'கடந்த 1984ல் சீக்கியர்களுக்கு எதிராக நடந்த கலவரத்துக்கு, காங்., பொறுப்பேற்க வேண்டும். தற்போது எங்களை அவமானப்படுத்தும் நோக்கில், அமெரிக்காவில் ராகுல் பேசியுள்ளார். இதற்கு அவர் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும்' என்றனர்.
வாடிக்கை
ராகுலுக்கு கண்டனம் தெரிவித்து, பா.ஜ., மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா நேற்று சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவு:
நாட்டை பிளவுபடுத்த சதி செய்யும் சக்திகளுடன் நிற்பதும், தேச விரோத கருத்துகளை வெளியிடுவதும் ராகுலுக்கும், காங்கிரசுக்கும் வாடிக்கையாகி விட்டது.
ஜம்மு - காஷ்மீரில் உள்ள தேசிய மாநாட்டு கட்சியை ஆதரிப்பது, வெளிநாட்டு மேடைகளில் இந்தியாவுக்கு எதிரான கருத்துகளை பேசுவது என, எப்போதும் தேச பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விடுக்கும் விதமாகவும், இந்தியர்களின் உணர்வுகளை புண்படுத்தும் விதமாகவும் ராகுல் செயல்படுகிறார்.
மதம், மொழி அடிப்படையில் பிளவுகளை ஏற்படுத்தும் காங்., அரசியலை, ராகுலின் பேச்சு அம்பலப்படுத்தி உள்ளது. இட ஒதுக்கீட்டுக்குஎதிரான காங்., நிலைப்பாட்டை, மீண்டும் ஒருமுறை அவர் வெளிப்படுத்தி உள்ளார். பா.ஜ., இருக்கும் வரை, யாராலும் இட ஒதுக்கீட்டை ரத்து செய்யவோ, தேசத்தின் பாதுகாப்பில் குழப்பம் ஏற்படுத்தவோ முடியாது.
இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.
மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் பியுஷ் கோயல் கூறுகையில், ''நம் நாட்டையும், வெளிநாடுகளில் உள்ள இந்தியர்களையும் அவமதிப்பது, ராகுலுக்கு வழக்கமாகி விட்டது. அவர், பொய் பிரசாரத்தின் தலைவர்,'' என்றார்.
வெளி நாட்டு பயணங்களின் போது, நம் நாடு குறித்து ராகுல் சர்ச்சைக்குரிய வகையில் பேசுவது இது முதன்முறையல்ல. பிரிட்டன், அமெரிக்கா என எந்த நாட்டுக்கு போனாலும், நம் நாடு, நம் நாட்டின் ஜனநாயகம் குறித்து, வாய்க்கு வந்தபடி பேசுவதை அவர் வழக்கமாக வைத்துள்ளார்.
இந்த முறை பல முனைகளில் இருந்து எதிர்ப்பு எழுந்துள்ளதால், என்ன செய்வது என தெரியாமல், காங்., தலைவர்கள், 'கப்சிப்' ஆகியுள்ளனர்.
ஏன் இவ்வளவு பொய்?
நாட்டின் கலாசாரத்தை பாதுகாப்பதில் சீக்கியர்களின் பங்களிப்பை ஒட்டுமொத்த நாடும் போற்றுகிறது. இந்தியா - சீனா பிரச்னை, இட ஒதுக்கீடு உட்பட அனைத்து விவகாரங்களிலும், உண்மைக்கு புறம்பான தகவல்களை ராகுல் தெரிவித்துள்ளார். அவர் ஏன் இவ்வளவு பொய் சொல்கிறார்?ராஜ்நாத் சிங்ராணுவ அமைச்சர், பா.ஜ.,
'பிரிவினைவாதிகளை அரவணைப்பது காங்கிரசுக்கு புதிதல்ல!'
லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல், தன் முன்னோர் செய்த குற்றங்களுக்கு வெள்ளை அடிக்க துடிக்கிறார். அவர், 'சீக்கியர்கள் தலைப்பாகை அணிய அனுமதிக்கப்படுவரா என்பது தான் இந்தியாவில் நடக்கும் போராட்டம்' போன்ற அறிக்கைகளை வெளியிட்டுள்ளார். பிரிவினைவாதிகளை அரவணைப்பது காங்கிரசுக்கு புதிதல்ல. எனவே, ராகுலின் செயல் யாரையும் ஆச்சரியப்பட வைக்கவில்லை.
இட ஒதுக்கீட்டிற்கு எதிராக ராகுல் மிகவும் ஆட்சேபனைக்கு உரிய கருத்துக்களை தெரிவித்துள்ளார். அவரின் தந்தையும், முன்னாள் பிரதமருமான ராஜிவ், 'இட ஒதுக்கீடு என்ற பெயரில் முட்டாளர்களுக்கு பதவி உயர்வு அளிக்க கூடாது' என்றார். ராகுல், தன் தாத்தா, பாட்டி, தந்தை அடிச்சுவடுகளை பின்பற்றி, இட ஒதுக்கீட்டுக்கு எதிராக பேசியுள்ளார்.
அண்ணாமலை,தமிழக பா.ஜ., தலைவர்.
காங்., நாடகமாடுகிறது!
இட ஒதுக்கீடு விவகாரத்தில், ராகுல் தவறான தகவல்களை தெரிவிக்கிறார். மத்தியில் 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்தும், எஸ்.சி., - எஸ்.டி., - ஓ.பி.சி., பிரிவினருக்கு காங்., எதுவுமே செய்யவில்லை. தற்போது அக்கறை இருப்பது போல் அக்கட்சியினர் நாடகமாடுகின்றனர்.
மாயாவதிதலைவர், பகுஜன் சமாஜ்