ADDED : ஜூலை 06, 2026 10:14 PM

அயோத்தி: அயோத்தி ராமர் கோவிலில் காணிக்கை நிதி முறைகேடு புகார் எழுந்த நிலையில், ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ர அறக்கட்டளை பொதுச்செயலாளர் பொறுப்பு, அறங்காவலர்களில் ஒருவரான கிருஷ்ண மோகன் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
உத்தர பிரதேச மாநிலம், அயோத்தியில் உள்ள பிரமாண்ட ராமர் கோவிலை, ஸ்ரீ ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை நிர் வகித்து வருகிறது. இந்த கோவில் உண்டியல் களில் செலுத்தப்படும் காணிக்கை மற்றும் பெறப்படும் நன்கொடைகளில் முறைகேடு நடந்ததாக சமீபத்தில் எழுந்த புகாரை அடுத்து, எஸ்.ஐ.டி., எனப்படும், சிறப்பு புலனாய்வு குழு விசாரித்து வருகிறது.
அதன் முதற்கட்ட விசாரணை அறிக்கை அடிப்படையில், ராமஜென்ம பூமி அறக்கட்டளையின் முன்னாள் பொதுச்செயலர் சம்பத் ராயின் ஓட்டுநர் ராமசங்கர் யாதவ் உட்பட எட்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்நிலையில் அறக்கட்டளை பொதுச்செயலாளர் சம்பத் ராய், மற்றும் அறங்காவலர் அனில் மிஸ்ரா ஆகியோர் தங்களது பதவிகளை ராஜினாமா செய்தனர். இதனை அறக்கட்டளை ஏற்றுக் கொண்டுள்ளது.
இதனையடுத்து பொதுச்செயலாளர் பொறுப்பானது, அறங்காவலர் கிருஷ்ண மோகன் வசம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது.
அறங்காவலர் கிருஷ்ண மோகன் கூறியதாவது: புது பொதுச்செயலாளர் நியமிக்கப்படும் வரை, அந்த பதவிடய என்னிடம் ஒப்படைத்துள்ளனர். இந்த விவகாரத்தில் யாரேனும் தவறு செய்தது நிரூபிக்கப்பட்டால், சட்டப்படி அவர்கள் கடுமையான தண்டனை பெற வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருப்போம்.
தற்போதுள்ள நடந்துள்ள சம்பவத்தை கண்டு நாங்கள் ஆழ்ந்த வேதனை அடைந்துள்ளோம். ராமரின் பக்தர்களும் கவலைப்படுகின்றனர்.நிர்வாகத்திலும், செயல்பாடுகளிலும் இருந்த சில குறைபாடுகளை மற்றவர்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டனர். எனவே, இந்த குறைபாடுகளைச் சரி செய்து தவறுகளை திருத்துவதே எங்களின் முதன்மையான முயற்சியாக இருக்கும். எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருப்பதை உறுதி செய்ய அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும். தற்போது நிலவும் சூழல் அறக்கட்டளைக்கு நற்பெயருக்கு களங்கம் விளைவித்து, சமூகத்தில் அவநம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது. இந்த எதிர்மறையான கண்ணோட்டத்தை அகற்றி, சமூகத்தில் நம்பிக்கையை மீண்டும் கட்டி எழுப்பத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் நாங்கள் எடுப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.
